டிரம்பை சந்திக்கிறாரா முதல்வர் எடப்பாடி..? ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்த அழைப்பு
டெல்லி: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்படவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பையேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது குறித்து இன்னும் எந்த விவரமும் வெளியாகவில்லை.
ஒரு வேளை ஜனாதிபதி மாளிகையின் அழைப்பையேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த விருந்தில் கலந்துகொண்டால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.

அழைப்பு
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகிறார். நாளையும், நாளை மறுதினமும் இந்தியாவில் இருக்கும் அவருக்கு 25-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், ஆகியோருக்கும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த அழைப்பு வந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

அரசியல் வாழ்க்கை
ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் நாளை கலந்துகொள்ளும் முதல்வர் எடப்பாடி டெல்லி செல்வது பற்றிய எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை. பட்ஜெட் விளக்கம் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு நாளை மறுதினம் காலை முதல்வர் டெல்லி செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையில் புதிய மைல்கல்லாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உலகத்தலைவர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனைத்து மாநில முதல்வர்களையும் டிரம்ப்பிடம் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதால் பல மாநில முதல்வர்களும் இந்த விருந்தில் பங்கேற்க ஆவல் காட்டுகின்றனர். ஏற்கனவே தமிழகம் வந்த சீன அதிபர் ஷின்பிங், விமானத்தில் புறப்படுவதற்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி நன்றி கூறிவிட்டு சென்றார். உலகத்தலைவர்கள் இருவரை சந்திக்கும் அரிய வாய்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது பதவிக்காலத்தில் கிட்டியிருப்பது குறிப்பிட்டத்தக்கது.

2 முதல்வர்கள்
இதனிடையே சுனாமி மீட்பு நடவடிக்கையின் போது தமிழகம் வந்த அமெரிக்க அதிபர் கிளிண்டனை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்தார். இப்போது மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதனை அவர் பய்ன்படுத்திக்கொள்வாரா எனத் தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால் இரண்டு அமெரிக்க அதிபர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு, அதிமுகவை சேர்ந்த இரண்டு முதலமைச்சர்களுக்கு கிடைத்தது தான்.












Click it and Unblock the Notifications