அமைச்சரவை கூட்டம்.. விவசாய துறைக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு.. விவசாய போராட்டத்தை கைவிட கோரிக்கை!
டெல்லி: விவசாய துறையில் மேம்பாடுகளை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் இந்த தொகையை அரசு ஒதுக்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட நிலையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 23,123 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அவசரகால ஒதுக்கீடாக செய்யப்படும் என்று புதிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்னொரு பக்கம் விவசாய துறையில் மேம்பாடுகளை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் அளித்த பேட்டியில், இந்தியா முழுக்க விவசாய உற்பத்தி சந்தைக் குழு வலுப்படுத்தப்படும். இங்கு விற்பனையை பெருக்க முயற்சிக்க எடுக்கப்படும். ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும். புதிய விவசாய சட்டங்கள் வந்த பின் விவசாய உற்பத்தி சந்தைக் குழு மூடப்படாது.
விவசாய சட்டங்கள் மூலம் விவசாய உற்பத்தி சந்தைக் குழுவிற்கு கூடுதல் நிதி அளிக்கப்படும். பலகோடி நிதி விவசாய உற்பத்தி சந்தைக் குழுவிற்கு கொடுக்கப்படும். இதன் மூலம் விவசாயத்துறை மேம்படுத்தப்படும். விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும்.
விவசாய உற்பத்தி சந்தைக் குழு மூடப்படாது. குறைந்தபட்ச ஆதாய விலை முறை தொடரும். விவசாயிகள் புதிய கோரிக்கைகளை வைத்தால் அது குறித்து பரிசீலிப்போம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். ஆனால் விவசாய சட்டங்கள் மூன்றும் திரும்ப பெறப்படாது. இந்த சட்டங்கள் எப்போதும் போல தொடரும்.
விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். போராட்டங்களை கைவிடுவது குறித்து விவசாய சங்கங்கள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராக வேண்டும். போராட்டம் அவர்களுக்கு பலன் அளிக்காது என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications