இந்தியர்கள் நாடு கடத்தல் டூ டெஸ்லா கார் தொழிற்சாலை வரை.. டிரம்புடன் மோடி பேசப்போவது இதுதான்!
டெல்லி: அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறி, அவர்களை டிரம்ப் அரசு வெளியேற்றி வருகிறது. கைகளில் விலங்கு போடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது விவாதமான நிலையில், இந்த வாரம் இறுதியில் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த சந்திப்பின்போது அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குறித்து பேசப்படுமா? என்றும், இனி இந்தியர்கள் அமெரிக்காவில் நிம்மதியாக இருக்க மோடி உறுதி அளிப்பாரா? என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இந்த வாரம் இறுதியில் அமெரிக்கா செல்லும் மோடி, அங்கு டிரம்பை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது 3 விஷயங்கள் பேசப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1. வர்த்தகம்
2. விசா விவகாரம்
3. வரி
அமெரிக்காவுடன் இந்தியா நீண்ட காலமாக நல்ல வர்த்தக உறவை கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் இந்த உறவு மேலும் நீடித்திருக்கிறது. 2017-2021 வரை இந்தியா அமெரிக்காவிடமிருந்துதான் பெட்ரோலை அதிக அளவில் வாங்கியது. ஆனால் இந்த வர்த்தகம் உக்ரைன்-ரஷ்யா போருக்கு பின்னர் பாதிக்கப்பட்டது.
ரஷ்யா பாதி விலையில் பெட்ரோலை விற்க முன்வந்ததால், அமெரிக்காவை தவிர்த்துவிட்டு, ரஷ்யாவிடம் பெட்ரோலை வாங்கியது இந்தியா. தற்போது மீண்டும் பெட்ரோல் விற்பனையில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதால், தங்களிடமிருந்து பெட்ரோலை வாங்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது.
மறுபுறம், இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்பது மோடியின் ஆசை. எனவே இதற்கான கோரிக்கையை இந்தியா தரப்பிலிருந்து மோடி முன் வைப்பார்.
இது தவிர மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரியை போன்று இந்தியாவுக்கு எந்த கூடுதல் வரியும் விதிக்கப்பட வேண்டாம் என்றும் மோடி வலியுறுத்துவார் என சொல்லப்படுகிறது. பதிலுக்கு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக சொல்லப்படும் 7 லட்சத்திற்கும் அதிகமான அகதிகளை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து செல்லுங்கள் என்று, டிரம்ப் கோரிக்கை வைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மிக முக்கியமாக இந்தியாவில் அணு சக்தி துறையில் அமெரிக்கா முதலீடு செய்ய வேண்டும் என மோடி தரப்பில் வலியுறுத்தப்படலாம். ஏனெனில், 2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தனது எரிசக்தித் தேவைகளில் பாதியைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று இந்தியா முடிவெடுத்திருக்கிறது. எனவே வர்த்தகம் தொடர்பாக இவையெல்லாம் பேசப்பட வாய்ப்புகள் அதிகம்.
இது தவிர, இந்தியா தனது வர்த்தக பாதையை விரிவாக்க ஈரானுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. சபாஹர் நகரில் ஒரு துறைமுகத்தை இந்தியா அமைத்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு கவலையளிக்கும் விஷயமாகும். தன்னிடம் கடன் வாங்கியவர்களை வேறு யாரிடமும் கந்துவட்டிகாரன் கடன் வாங்க விடமாட்டான். அதுபோலதான் அமெரிக்காவும், தன்னிடம் வர்த்தகம் செய்யும் இந்தியாவை மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.
எனவே சபாஹர் துறைமுக திட்டத்தை கைவிட வைக்கவும் இந்தியாவுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
விசாவை பொறுத்தவரையில், H-1B விசா முறையை ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. அதை பிரதிபலிக்கும் வகையில், டிரம்ப் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். உதாரணத்திற்கு H-1B விசா அடிப்படையில் நீங்கள் அமெரிக்கா வாழ் இந்தியர்களாக இருக்கிறீர்கள் எனில், அமெரிக்காவில் உங்களுக்கு குழந்தைகள் பிறந்தால் அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இதனை டிரம்ப் நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை ரத்து செய்ய வெண்டும் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர். எனவே, மோடி இந்த விஷயம் குறித்து டிரம்பிடம் பேச வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications