“தலைக்குமேல் கத்தி”.. ஓபிஎஸ் மகன் நிலை என்ன? அதிமுகவின் ஒரே எம்பியாச்சே! சிக்கலாகும் எடப்பாடி “சைன்”
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதிமுகவின் ஒரே ஒரு லோக்சபா உறுப்பினரான ரவீந்திரநாத்தின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.
டெல்லி: கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள், அவரது மகன்களை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லுபடியாகி இருக்கிறது. இந்த சூழலில் அதிமுகவின் ஒரே ஒரு லோக்சபா உறுப்பினரான ரவீந்திரநாத்தின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு மே மாதம் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலன சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.

நீக்கப்பட்ட ஓபிஎஸ்
அதிமுக பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் மூலம் அதிமுகவில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டனர்.

18 பேர் நீக்கம்
அடுத்த சில நாட்களிலில் ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

அதிமுகவின் ஒரே எம்பி
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தேனியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. தேனியில் இருந்து மக்களவைக்கு சென்ற ரவீந்திரநாத் தொடர்ந்து மத்திய பாஜக அரசின் கொள்கைகளை வரவேற்றும், ஆதரித்தும் பேசி வந்தார்.

ஓம் பிர்லாவுக்கு கடிதம்
இந்த நிலையில் அதிமுகவிலிருந்து ரவீந்திரநாத்தை நீக்கியதால் அக்கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒரு எம்.பி கூட இல்லாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவரை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி, ஓபிஎஸ் கோரிக்கை
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தை மக்களவையில் அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கடிதத்தில் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.

சன்சாத் டிவி
அந்த கடிதம் எழுதிய சில நாட்களில் கூடிய மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி அண்மையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரை ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லோக் சபாவில் பேசியபோது நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான சன்சாத் டிவியில் அதிமுக எம்.பி என்றே குறிப்பிடப்பட்டு வருகிறார். எனவே டெல்லி ஓபிஎஸ் பக்கம்தான் இருப்பதாக கூறப்பட்டது.

அதிமுக எம்பியாக தொடர்வாரா?
அண்மையில் நடைபெற்ற ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ், மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார் ரவீந்திரநாத். இந்த நிலையில் இன்று ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டமும், அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பளித்து உள்ளது. இந்த நிலையில் அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் மீண்டும் அதிமுக எம்பியாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.












Click it and Unblock the Notifications