விவசாயிகளுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் நிதியுதவி, ரூ.12000 ஆக உயர்த்தப்படுமா? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என்று வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தும் திட்டம் இல்லை என நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை 'பிரதமர்-கிசான் சம்மான் நிதி' என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளின் கடனைக் குறைக்க மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் படி, தகுதியுடைய விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரத்தைய மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த சூழலில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என்று வழங்கப்படும் நிதியுதவியை 12000 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. இதுபற்றி நேற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, கேள்வி எழுப்பிய எம்பிக்கள், ரூ.6 ஆயிரத்தை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை உயர்த்தும் திட்டம் உள்ளதா? என்று கேட்டனர்.
அதற்கு மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், விவசாயிகள் நிதியுதவி தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் தற்போது பரிசீலனையில் இல்லை. மேலும் பெண் விவசாயிகளுக்கு நிதி உதவியை உயர்த்தும் திட்டம் இல்லை.
மத்திய அரசு சார்பில் நேரடியாக பணம் வரவு வைக்கும் மிகப்பெரிய திட்டங்களில் 'பிரதமர்-கிசான் சம்மான் நிதி' திட்டமும் ஒன்றாகும். இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வகை செய்யப்படும் திட்டமாக உள்ளது. தகுதியுள்ள விவசாயிகளை அடையாளம் காண்பதும், உறுதிப்படுத்துவதும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பு ஆகும். இதுவரை 15 தவணைகளாக 11 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் மட்டும் 2 கோடியே 62 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் இத்தொகையை பெற்று வருகிறார்கள்" இவ்வாறு கூறினார்.
ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் மத்திய அரசின் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். தமிழகத்தில் கொரோனா காலத்தில், 41 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றனர். ஆனால் இணையதளத்தின் ரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி விவசாயிகள் அல்லாத பலர் முறைகேடாக உதவித்தொகை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே இப்படியான முறைகேடுகள் அப்போது பெரிய அளவில் நடந்தது.இதனால விவசாயிகள் உதவி தொகை விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கென தனி இணைய தளத்தை உருவாக்கிய மத்திய அரசு, முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் விடுவித்து வருகிறது. தமிழ்நாட்டில அதன்பிறகு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
pm kisan விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு 15வது தவணைத்தொகையான ரூ.18000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பரில் விடுவித்தார். அடுத்த தவணை தொகை அனேகமாக அடுத்த மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications