டிரம்ப்பின் வரியால்.. இந்தியாவில் ஐபோன் விலை உயருமா? தெரிஞ்சுக்கோங்க
டெல்லி: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக, டிரம்ப் பக்கத்து நாடுகளுக்கு கூடுதல் வரியை விதித்திருக்கிறார். இந்த வரி காரணமாக இந்தியாவில் ஐபோன் விலை உயர வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
உண்மையில் ஐபோன் விலை உயருமா? ஆம் எனில் எவ்வளவு உயரும்? என்பது குறித்து இந்த செய்தி விளக்குகிறது.

எலக்ட்ரானிக் பொருட்கள் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா மிக முக்கியம். ஏனெனில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைத்து, இங்கிருந்து பொருட்களை தயாரித்து அமெரிக்காவில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனை செய்கின்றன. காரணம் இந்திய தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கிவிடலாம். அமெரிக்காவில் இந்த பப்பு வேகாது.
இங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மொத்த எலக்ட்ரானிக் பொருட்களின் மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் 60% ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான பொருட்கள்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக 3ல் 2 பங்கு ஆப்பிள் போன்களுக்கு தேவையான பொருட்களே ஏற்றுமதியாகின்றன. ஐபோன் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் அதிக அளவு ஏற்றுமதியாகிறது.
நல்வாய்ப்பாக சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய டிரம்ப், எலக்ட்ரானிக் பொருட்களுக்கான வரி குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால் இந்தியா குறித்து பேசியிருக்கிறார். இந்தியா அதிக வரி விதிக்கிறது என்று புலம்பியிருக்கிறார். இப்படி அதிக வரி விதிக்கப்படும் நாடுகளுக்கு அமெரிக்கா அவர்கள் மொழியில் பதில் சொல்லும். அதாவது, இந்தியா 100% வரி விதித்தால் நாங்களும் அதையே செய்வோம் என்று கூறியுள்ளார்.
டிரம்ப் இந்தியா மீது வரியை போட்டால் இங்கிருந்து உற்பத்தி செய்து அனுப்பப்படும் பொருட்களின் விலை உயரும். எனவே ஐபோன் விலையும் உயர வாய்ப்பு இருக்கிறது என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இங்குதான் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். என்னவெனில், அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கான வரியை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் 15-20% வரை குறைத்திருந்தது. ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 20% வரை குறைத்திருந்தது.
இதனால் அமெரிக்கா எலக்ட்ரானிக் பொருட்கள் மீது வரியை விதிக்காது. ஆகவே, இந்தியாவில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. எல்லாம் ஓகேதான்.. டிரம்ப் இந்த விஷயத்தில் சரியாக நடந்துகொண்டால் மட்டுமே நமக்கு பாதிப்பு இருக்காது. வீம்புக்கு இந்திய எலக்ட்ரானிக் பொருட்கள் மீது அவர் வரியை போட்டால் எல்லாம் தலைக்கீழாக மாறிவிடும்.
எனவே இப்போதைக்கு இந்திய சந்தையில் ஐபோன்களின் விலை உயர வாய்ப்பு குறைவுதான். ஐபோன்கள் மட்டுமல்ல மற்ற நிறுவனங்களின் மொபைல்களின் விலையும் உயர வாய்ப்பு குறைவு. இதற்கு மற்றொரு காரணம் சீன நிறுவனங்களின் தயாரிப்புதான்.
Xiaomi, Vivo, Oppo, Realme, OnePlus, iQOO, Tecno, Infinix, மற்றும் Huawei ஆகிய சீன நிறுவனங்களின் மொபைல்கள்தான் தற்போது இந்திய சந்தையை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த மொபைல்களின் விலையும் குறைவு. அதே நேரம் தரமானதாகவும் இருக்கிறது. எனவே, போட்டிக்கு வரும் மொபைல்களின் விலை குறைவாக இருந்தால்தான் அது விற்பனை ஆகும். இந்த வியாபர போட்டியும் இந்தியாவில் மொபைல் போன்களின் விலையை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்க என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே ஐபோன் விலை உயருமா?












Click it and Unblock the Notifications