மாதவிடாய் காலத்தில் ஏன் சபரிமலைக்கு போகக்கூடாது? ஸ்மிருதி சொன்ன பலே உதாரணம்
Recommended Video
டெல்லி: அனைவருக்குமே வழிபடுவதற்கான உரிமை உள்ளதே தவிர இழிவுபடுத்துவதற்காக உரிமை கிடையாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இளம் சிந்தனையாளர்கள் மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது இதில் பங்கேற்று ஸ்மிருதி இரானி (42) பேசுகையில் சபரிமலை விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது.
|
இழிவுபடுத்தும் உரிமை இல்லை
ஆனால் வழிபடும் உரிமை உள்ளது என்பதில் எனக்கு எவ்வாறு நம்பிக்கை உள்ளதோ அதே போல இழிவுபடுத்துவதற்காக உரிமை கிடையாது என்பதிலும் நம்பிக்கை உள்ளது. இதற்கு பெரிய சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாமானியமாக நீங்களே யோசியுங்களேன்.
சானிட்டரி நாப்கின்
மாதவிடாய் காரணமாக ரத்தத்தோடு இருக்கக்கூடிய ஒரு சானிட்டரி நாப்கினை உங்களது நண்பர்களின் வீட்டுக்கு தூக்கி கொண்டு செல்வீர்களா? இல்லை தானே! அப்படி இருக்கும்போது கடவுளின் வீட்டுக்கு மட்டும் ஏன் அவ்வாறு சென்றே ஆகவேண்டும்?
நானும் பின்பற்றுகிறேன்
மும்பை அந்தேரியில் உள்ள கோயில் ஒன்றிற்கு நான் சென்றபோது மாதவிலக்கு காரணமாக நான் கோயிலுக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தேன். எனது மகனை மட்டும் பூசாரியிடம் கொடுத்து அனுப்பி பூஜை விஷயங்களை நிறைவேற்றி வருமாறு தெரிவித்தேன். இதுதான் நான் கோயிலுக்கும், மரபுகளுக்கும் வழங்கக்கூடிய மரியாதை. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமையுள்ளது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, பம்பை முதல் சன்னிதானம் வரை போராட்டங்கள் நடைபெற்றதால், மாதவிடாய் சுழற்சி கொண்ட எந்த இளம் பெண்ணும் சபரிமலைக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.