வேறு வழியில்லை.. 2024 தேர்தலில் வெற்றி பெறுவதே ஒரே லட்சியம்: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சோனியா
டெல்லி: 2024 தேர்தலில் வெற்றி பெறுவதே ஒரே லட்சியம், இதற்காக நாம் ஒரே குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு வர முயன்று கொண்டு இருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மொத்தம் 18 கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன. 2024 தேர்தல் குறித்தும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஷ்டிரிய ஜனதா தளம் லாலு யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், நேஷனல் கான்பிரன்ஸ் உமர் அப்துல்லா, அகாலி தளம் கட்சி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தலம் கட்சி தேசிய தலைவர் தேவ கவுடா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சோனியா காந்தி
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, நாம் எல்லோரும் முறையாக திட்டமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக நாம் உழைக்க வேண்டும். பல்வேறு நிர்பந்தங்களை கடந்து நாம் உழைக்க வேண்டும். நமக்கு வேறு வழியே இல்லை. நமக்கு நிறைய கட்டாயங்கள் உள்ளன. ஆனால் அனைத்தையும் மீறி தேசத்தின் நலனுக்கான, நாம் மேலே எழுந்து நிற்க வேண்டும்.

தேச நலன்
நமது தேசத்தின் நலனுக்காக நாம் கட்டுப்பாடுகளை கடந்து மேலே எழ வேண்டும். 2024 தேர்தலில் வெற்றி பெறுவதே ஒரே லட்சியம். இதற்காக நாம் ஒரே குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும். நமது நாட்டின் சுதந்திரத்தை, நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் ஒரு அரசை உருவாக்குவதற்காக நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.

சுதந்திர தினம்
நாம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை இப்போது கொண்டாடி இருக்கிறோம். நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு மனோதிடத்தை மீண்டும் உயர்த்துவதற்கான பொருத்தமான சந்தர்ப்பம் இதுதான். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் நாம் ஒன்றாக இருந்தது போல இனிய வரும் பாராளுமன்ற கூட்டத்திலும் நாம் ஒன்றாக செயல்பட வேண்டும், என்று சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications