வேண்டாம், தேசிய அணை பாதுகாப்பு மசோதா.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்
டெல்லி: தேசிய அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கைகளை தொடர வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து மாநிலங்களுடனும் கலந்து பேசி ஒருமித்த கருத்து ஏற்படும் வரை அணை பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி ஜூன் 15ம் தேதி கடிதம் எழுதியதை குறிப்பிட்டுள்ளார்.
அணைப் பாதுகாப்பு மசோதா குறித்த தமிழக மக்களின் கவலைகளை தெரிவிக்கும் வகையில் ஜூன் 26ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கவலைகள் தீர்க்கப்படாமலும், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்காமலும் அணைப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அதன் இயக்கமும் பராமரிப்பும் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அணைப் பாதுகாப்பு மசோதாவில், கூறியிருப்பது தமிழகத்தின் நலனுக்கு எதிராக அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணைகள் பிற மாநிலங்களில் இருந்தாலும் அவற்றின் கட்டுப்பாடு, இயக்கம், பராமரிப்பு ஆகியவை அந்த மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பின் அதிகார வரம்புக்கு உட்பட்டிருக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீரமைப்புப் பணிகளுக்காக அதிகாரிகள் வனம் மற்றும் வனவிலங்குப் புகலிடப் பகுதிக்குச் சென்றுவர வகைசெய்ய திருத்தம் கொண்டுவரவும் கருத்துரைத்துள்ளார்.
தமிழகத்தின் கவலைகள் தீர்க்கப்படும் வரையும், மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து எட்டும் வரையும் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அணைப் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.