வீடியோ காலில் வந்த கணவர்.. கும்பமேளாவில் யோசிக்காமல் மனைவி செய்த செயல்.. ஆடிப்போன நெட்டிசன்கள்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவில் பெண் பங்கேற்று புனித நீராடினார். இந்த சமயத்தில் வீடியோ காலில் கணவர் வந்தபோது சற்றும் யோசிக்காத அந்த பெண் செல்போனை தண்ணீரில் நனைத்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை ஒருதரப்பு வரவேற்கும் நிலையில் இன்னொரு தரப்பு விமர்சனம் செய்து வருகிறது.
நம் நாட்டில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடந்து வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ‛மகா கும்பமேளா' தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றாக இணையும் திரிவேணி சங்கமம் எனும் இடம் உள்ளது. அங்கு தான் கும்பமேளா கடந்த மாதம் 13ம் தேதி இந்த கும்பமேளா விழா தொடங்கியது. சிவராத்திரி தினமான நாளையுடன் இந்த கும்பமேளா முடிவுக்கு வர உள்ளது.
நாளை மகா கும்பமேளாவின் கடைசி நாளாகும். 45 வது நாளான நாளை வழக்கம்போல் அதிகமான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கும்பமேளாவில் பங்கேற்ற பெண் ஒருவர் புனித நீராடினார். முன்னதாக அவரது செல்போனில் கணவர் வீடியோ காலில் வந்தார்.
அப்போது சற்றும் யோசிக்காத அந்த பெண், தனது செல்போனை தண்ணீரில் 6 முறை நனைத்து வெளியே எடுத்தார். தனது கணவரால் மகா கும்பமேளாவில் நேரில் பங்கேற்க முடியவில்லை. இதனால் அவரை வீடியோ காலில் அழைத்து செல்போனை தண்ணீரில் நனைத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை வெகு சிலர் வரவேற்ற நிலையில், ஒரு தரப்பு எதிர்ப்பு
தெரிவித்தனர். மூடநம்பிக்கை என்று அந்த பெண்ணை கடுமையாக சாடினர். அதேவேளையில் மற்றொரு தரப்பில் கிண்டல் செய்து வருகின்றனர். அதன்படி ஒருவர் ‛‛அந்த சகோதரரிடம் (பெண்ணின் கணவர்) ஆடையை மாற்ற சொல்லுங்கள். இல்லாவிட்டால் சளி பிடிக்கும்'' என்று கிண்டல் செய்துள்ளார். மற்றொருவரோ, ‛‛உங்களின் இந்த முயற்சியால் செல்போன் செயலி அனைத்தும் புனித நீராடி உள்ளது. நன்றி'' என்று கேலி செய்துள்ளார்.
கும்பமேளாவில் இப்படி நடப்பது இது முதல் முறைல்ல. சமீபத்தில் பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் கோயல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். மகா கும்பளோவுக்கு வர முடியாதவர்கள் தங்களின் போட்டோவை வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினால் போதும். போட்டோவை புனித நீராட வைப்பேன். இதற்கு ரூ.1,100 கட்டணம் என்று கூறி அதிர வைத்திருந்தார். மகா கும்பமேளாவில் தற்போது வரை 60 கோடிக்கும் மேலானவர்கள் புனித நீராடி உள்ளனர். இதில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்களும், தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்டவர்களும் அடங்குவர்.












Click it and Unblock the Notifications