சாவி இல்லை.. நடுரோட்டில் தவித்த இளம்பெண்.. விடிய விடிய பாதுகாப்பிற்காக உடன் நின்ற ரேபிடோ டிரைவர்!
டெல்லி: இரவு பெண் ஒருவர் ரேபிடோ பைக் டாக்சி மூலம் வீட்டுக்கு வந்துள்ளார். அந்த பெண் வீட்டுக்கு வந்து சேரவே கிட்டத்தட்ட நள்ளிரவு ஆகியுள்ளது. அந்தப் பெண்ணிடம் ரூம் சாவி இல்லாத நிலையில், சாலையில் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்து, அந்த ரேபிடோ டிரைவர் இரவு முழுக்க சாலையிலேயே காத்திருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நமது நாட்டில் இந்தக் காலத்தில் பைக் டாக்சி பேமஸாகி வருகிறது. விலை குறைவு, எங்கு வேண்டுமானாலும் ஈஸியாக செல்ல முடியும் உள்ளிட்ட பல காரணங்களால் பலரும் பைக் டாக்சியை விரும்பி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆண்கள் மட்டுமின்றி இப்போது பெண்களும் கூட கணிசமாக பைக் டாக்சியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

பைக் டாக்சி
இருப்பினும், பெண்கள் பைக் டாக்சியை பயன்படுத்தும்போது அவர்களிடம் டிரைவர்கள் சிலர் அத்துமீறி நடந்து கொள்வதாகப் புகார்கள் வரவே செய்கிறது. இது போலச் சமூக வலைத்தளங்களில் நாம் பல சம்பவங்களைப் பார்க்கலாம். ஆனால் அதற்கு நேர் மாறான ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. அதாவது ஒரு ரேபிடோ டிரைவர் தனது டிரிப்பில் ஒரு பெண்ணை இறக்கி விட சென்றுள்ளார். இருப்பினும், அவர் அந்தத் தெருவில் தனியாக நிற்க வேண்டிய சூழல் வந்ததுள்ளது. இதனால் அங்கிருந்து செல்ல மறுத்த அந்த ரேபிடோ டிரைவர், அந்தப் பெண்ணின் ரூம்மேட் வரும்வரை அருகிலேயே பாதுகாப்பிற்காக இருந்துள்ளார்.
நெகிழ்ச்சி
தனக்கு நேர்ந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து அந்தப் பெண் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர், "ஹலோ நண்பர்களே, நான் கர்பா நடனம் முடித்துவிட்டு இரவு வீடு திரும்ப லேட் ஆகிவிட்டது. ஆனால், எனது ரூம் சாவிகள் என்னிடம் இல்லை. என் ரூம்மேட் வெளியே சென்றுள்ளார்.. நான் காத்திருக்கிறேன். ஏறக்குறைய நள்ளிரவு ஆகிவிட்டது.. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. நான் காத்து கொண்டிருந்தேன்" என்கிறார்.
காத்திருந்த டிரைவர்
பிறகு கேமராவை திரும்பி காட்டியபோது அங்கே ரோட்டில் ரேபிடோ டிரைவரும் நிற்கிறார். அப்பெண் மேலும், "இந்த ரேபிடோ டிரைவர் எனது ரூம்மேட் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தார். அவர் என்னிடம் 'மேடம், உங்கள் தோழி வரும் வரை நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று சொன்னார். இதைக் கேட்கும் போது நிம்மதியாக இருக்கிறது. நமது சமூகத்தில் இன்னும் மனித நேயம் இருக்கத் தான் செய்கிறது" என்று அவர் கூறுகிறார்.

நெட்டிசன்கள் பாராட்டு
இந்த வீடியோ செப்டம்பர் 26ம் தேதி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஷிவானி சுக்லா என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. அந்த வீடியோவே இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் ரேபிடோ ஓட்டுநரின் இந்தச் செயலைப் பாராட்டினர். நெட்டிசன் ஒருவர், "ரேபிடோ ப்ரோ! உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்" என்று வாழ்த்திருந்தார்.
இன்னொரு நபர், "இப்படிப்பட்ட மனிதருக்கு உலகில் உள்ள அனைத்து மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார். இன்னொரு நபர், "இவரைப் போன்றவர்களை நிலக்கரிச் சுரங்கத்தில் வைரம் கண்டுபிடிப்பது போன்றது" என்று வியந்து ட்வீட் செய்துள்ளார். இதுபோல பலரும் அந்த ரேபிடோ டிரைவரை பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications