இனி 1 வருடத்திற்கு மட்டும்தான் வொர்க் ஃப்ரம் ஹோம்? வருகிறது அதிரடி விதி.. மத்திய அரசு முடிவு?
டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்து இயல்பு நிலைக்கு நாடு திரும்பியிருந்த நிலையில் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்து பணி செய்பவர்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவில் அதிகபட்சமாக ஓராண்டுக்கு வீட்டிலிருந்து பணிபுரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று, மக்களின் இயல்பு வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

வேலை ஐடி
பலர் வேலையை இழந்திருந்தாலும், ஐடி போன்ற துறையில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றலாம் என்று சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் அறிவுறுத்தியிருந்தன. இந்நிலையில் தற்போது வீட்டிலிருந்து பணி செய்பவர்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவில் பணிபுரிபவர்கள் அதிகபட்சமாக ஓராண்டுக்கு வீட்டிலிருந்து பணிபுரியலாம் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவு
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொதுச் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சிறப்புச் சலுகைகளுடன் அரசால் உருவாக்கப்படும் கட்டமைப்பே சிறப்புப் பொருளாதார மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த பகுதிகளிலிருந்து பணிபுரிபவர்களுக்கு ஓராண்டு வரை வீட்டிலிருந்து பணிபுரிய அவகாசம் வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அறிவிப்பு
இந்த அறிவிப்பானது 2006ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டல சட்டப்பிரிவு 43A-வின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்கிற நோக்கிலும் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விதியானது தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி செய்யலாம்
அதேபோல ஏற்கெனவே வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவது குறித்து அவர்களுக்கு 90 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக சுமார் 50 சதவிகித ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கலாம் என்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் இந்த புதிய விதிகளில் தெரிவித்துள்ளது. தற்போது ஓர் ஆண்டுக்கு மட்டுமே வீட்டிலிருந்து பணி செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தேவைகளுக்கு ஏற்ப இந்த கால அவகாசத்தை நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் விதி தளர்வு அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications