இன்று 3வது முறை பிரதமராகும் மோடி! பதவியேற்பில் பங்கேற்கும் உலக தலைவர்கள் யார் யார் தெரியுமா?
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் நேருவை போல் தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி நாளை பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் விழாவில் பங்கேற்க உள்ள தலைவர்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகின. இதில் யாருக்கும் தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் உதவியுடன் நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

நாளை இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நரேந்திர மோடி கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்று 10 ஆண்டு பணியை நிறைவு செய்தார். நாளை அவர் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம் அவர் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களிடம் பிரதமர் மோடியே நேரடியாக போனில் பேசி அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று அவர்கள் விழாவில் பங்கேற்க வருகின்றனர்.
அதன்படி வங்தேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று இந்தியா வருகிறார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை இந்தியா வந்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். அதேபோல் நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல், பூடான் பிரதமர் டிஷரிங் டொபேய், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சமீபகாலமாக சீனாவுடன் இணக்கமாக செயல்பட்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் விழாவில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதவிர விழாவில் பாஜக முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், மடாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் முதல் முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். அந்த சமயத்தில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் விழாவில் பங்கேற்றனர். அதன்பிறகு 2019ம் ஆண்டில் BIMSTEC நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் தான் தற்போது அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அழைப்பு என்பது விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications