தாண்டவம் ஆடும் 2ஆம் அலை.. மூச்சு திணறும் இந்தியா.. உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.54 லட்சம் பேர் உட்பட உலகெங்கும் நேற்று மட்டும் மொத்தம் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பல நாடுகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் பரவி வரும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா மற்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நாடுகளும் இந்தியாவுடனான போக்குவரத்திற்குத் தடை செய்துள்ளன.

இந்தியா கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் சுமார் 3.19 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நாட்டில் இதுவரை 1.73 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் 2,762 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் 1.95 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் புதிதாக 744,434 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.77 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 10,005 பேர் பலியாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பும் 31 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகெங்கும் தற்போது 1.8 கோடிக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நாடுகளில் மோசம்
இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் மற்றும் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசில் நாட்டில் 32,553 பேருக்கும் அமெரிக்காவில் 42,097 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல துருக்கி நாட்டில் நேற்று மட்டும் 38,553 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 24,465 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் நேற்று மட்டும் 1,316 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 347 பேரும், அமெரிக்காவில் 273 பேரும் பிரான்ஸ் நாட்டில் 145 போரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 1,95,116 ஆக உள்ளது.

உதவ தயார்
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மிக மோசமாக உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்குத் தேவையான மூலப்பொருட்கள் வழங்குவது பற்றி அமெரிக்க அதிபர் பைடன் பிரதமர் மோடியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதேபோல ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம் தயார் செய்து வருவதாகவும் அறிவித்துள்ளார். இது தவிரவும் சீனா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications