அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு-பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மல்யுத்த வீரர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்திய திருநாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் பெற்று தந்தவர்கள் மல்யுத்த வீராங்கனைகள். ஆனால் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் பாஜக எம்பி பிரிஜ் பூஷண், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் பிரிஜ் பூஷணுக்கு எதிராக பகிரங்க போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் முன்னெடுத்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் வாட்டி வதைக்கும் வெயிலில் அமர்ந்து நீதி கோரி மல்யுத்த வீராங்கனைகள் ஒரு மாதம் போராடினர். பெரும் போராட்டத்துக்குப் பின் உச்சநீதிமன்ற தலையீட்டால் பிரிஜ் பூஷண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அதன் பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கொதித்து எழுந்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த சென்றனர். அப்போது மல்யுத்த வீரர்களை போலீசார் கொடூரமான முறையில் ஒடுக்கினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை கங்கையில் வீசுவோம் எனவும் மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர். இந்த விவகாரத்தில் விவசாயிகள் சங்கத்தினரும் தலையிட்டு மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நின்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மல்யுத்த வீரர்கள் குழுவினர் சந்தித்தனர். மத்திய அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் சுமார் 2 மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பின் போது பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேநேரத்தில் பிரிஜ் பூஷண், கிழக்கு உ.பி. அரசியலில் நிழல் உலக தாதாவாக செயல்படுகிறவர்கள். அவரால் பாஜகவுக்கு 12 லோக்சபா தொகுதிகளில் வெற்றி உறுதி என்கிற நிலை உள்ளது. பிரிஜ் பூஷண் மீது கை வைத்தால் இந்த 12 தொகுதிகளை பாஜக இழக்கக் கூடும் என்பதால் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே கைது செய்யாமல் இருக்கிறது என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications