"தமிழ்நாட்டில் திமுக அரசு வலுவாக உள்ளது.. பாஜகவால் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது!" யஷ்வந்த் சின்ஹா
டெல்லி: தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நாட்டில் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தது.
உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.. முதல்வர் ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் வாழ்த்து
அதன்படி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆதரவு கோரினார்
அவர் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பின்னர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, பல்வேறு கட்சிகளைச் சந்தித்து தனக்கு ஆதரவு கோரி வருகிறார். அதன்படி இன்று சென்னை வந்த அவர், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
யஷ்வந்த் சின்ஹா
அப்போது பேசிய யஷ்வந்த் சின்ஹா, "எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் களமிறங்குகிறேன். நான் வேட்புமனு தாக்கல் செய்த மறுநாளில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பல கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். மற்ற மாநிலங்களும் சென்று மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர முடிவு செய்துள்ளேன்.
தமிழகத்தில் வலுவான ஆட்சி
எப்போதும் நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலைப் போன்றது இல்லை. இப்போது நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் முக்கியமானது. நாம் அசாதாரணமான சூழலில் இருக்கிறோம். மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் இந்த நேரத்தில் நாம் இங்குப் பேசிக் கொண்டு இருக்கிறோம். நல்வாய்ப்பாக இங்குத் தமிழகத்தில் வலுவான ஆட்சி உள்ளது. மத்திய அரசு என்ன முயன்றாலும் இங்கு ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆனால், வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவர்கள் அரசைக் கவிழ்கிறார்கள்.
மத்திய அரசு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜக அனைத்து முறைகளையும் பின்பற்றுகிறது. பணத்தை வாரி இறைக்கிறார்கள். அமலாக்கத் துறை தொடங்கி அனைத்து அமைப்புகளையும் பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. நான் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் இதுபோல நடக்காமல் இருக்க அழுத்தம் தருவேன். நாட்டின் கூட்டாட்சி தத்துவம் சிக்கலில் உள்ளது. மாநில அரசுகளுக்கான உரிமை மறுக்கப்படுகிறது.
ஆளுநர்கள்
ஆளுநரின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் செயல்பட வேண்டிய ஆளுநர்கள், பாஜக ஏஜெண்டாக செயல்படுகின்றனர். இதுவும் நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழலில் குடியரசுத் தலைவர் பதவி முக்கியமானதாக மாறுகிறது. இந்த நேரத்தில் ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் தேவையில்லை
பிரதமர் மோடி
நான் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். பாஜக தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருவேன். பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மோடியிடம் கூட ஆதரவு கேட்க முயன்றேன். அவரது அலுவலகத்திற்கு ஃபோன் செய்து மோடியிடம் பேச வேண்டும் என்றான். ஆனால் அவர் வழக்கம் போலப் பேசவில்லை" என்று அவர் தெரிவித்தார்.