நினைவு இருக்கா! அலறிய கேரளா.. சிறுவனின் மூளையை காலி செய்த அமீபா! ஏரியில் குளிக்கும் போகும்போது கவனம்
டெல்லி: இந்தாண்டு நமது இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளிலும் மோசமான மூளை உண்ணும் அமீபா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது எதனால் ஏற்படுகிறது.. ஏன் இது ஆபத்தானது? இதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் மருத்துவம் துறை படுவேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த நூற்றாண்டில் மனிதர்களை ஆட்டிப்படைத்துப் பல மோசமான நோய்ப் பாதிப்புகளுக்கு இந்த நவீன மருத்துவம் தீர்வுகளை வழங்கியுள்ளது.

முன்பு காப்பாற்றவே முடியாது என்று இருந்து பல மோசமான நோய்களுக்குச் சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகவே மனிதர்களின் சராசரி வாழ்க்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
நவீன மருத்துவம்: அதேபோல முன்பு திடீர் திடீரென மர்மமாக உயிரிழப்புகள் ஏற்படும். இவை எல்லாம் எதனால் ஏற்படுகிறது. அதைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று அப்போது போதிய விழிப்புணர்வு இருக்காது. மொத்தம் பொதுவாக மர்ம நோய் என்பார்கள். அல்லது பேய் பிசாசு என்று அறிவியலுக்குப் புறம்பான காரணங்களை அடித்துவிடுவார்கள். ஆனால், இன்றைய நவீன மருத்துவம் அனைத்திற்கும் துல்லியமான காரணங்களை நமக்கு அளிக்கிறது.
அப்படி இந்தாண்டு உலகை அச்சுறுத்திய ஒரு பாதிப்பு என்றால் அது தான் அமீபிக் என்செபாலிடிஸ். இதை மூளையை உண்ணும் அமீபா என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் இந்த பாதிப்பு உலகின் ஏதோ ஒரு மூளையில் தான் ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. ஆனால், இந்தாண்டு நமது அண்டை மாநிலமான கேரளாவிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா மரணம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 15 வயது சிறுவனுக்கு இந்த அரிய வகை பாதிப்பு ஏற்பட்டது. திடீரென அவருக்கு அதிக காய்ச்சலால் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களில் ஒவ்வொரு உடல் உறுப்புகளாகச் செயலிழக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு என்ன பாதிப்பு என்று தெரிய வருவதற்குள் உயிரே போய்விட்டது.
அந்த நபர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஓடையில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.. அப்படிக் குளிக்கும் போது தான் அவருக்கு அமீபிக் என்செபாலிடிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெக்லேரியா ஃபோலேரி என்ற வகை அமீபாவால் ஏற்படுகிறது. இதை மூளையை உண்ணும் அமீபா என்றும் சொல்வார்கள். இவை இயற்கை சூழலிலும், குறிப்பாக வெதுவெதுப்பான நீரிலும் செழித்து வளரும். அதேநேரம் உப்பு நீரில் இருக்காது. எனவே, கடல் நீரில் இந்த அமீபா காணப்படவில்லை.
எங்கே ஏற்படும்: பொதுவாக இவை இது ஏரிகள் மற்றும் ஆறுகளில் இருக்கும். இதன் காரணமாகவே அந்த கேரள இளைஞருக்கு மோசமான உயிரிழப்பு ஏற்பட்டது. அவரை போலவே கடந்த ஓராண்டில் பலருக்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மூளையை உண்ணும் அமீபா நேரடியாக நமது மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கும்.
தடுக்க என்ன செய்யணும்: இந்த வகை பாதிப்பு ஏற்பட்டாலே 95% வரை உயிரிழப்புகள் ஏற்படும். பொதுவாக இவை மோசமாக நிர்வகிக்கப்படும் குளங்கள் அல்லது தேங்கி நிற்கும் நீரில் ஏற்படும்.. எனவே, இந்த மூளையை உண்ணும் அமீபா பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் முதலில் இதுபோன்ற குளங்கள் அருகில் கூட செல்லாதீர்கள். மேலும், இவை அனைவருக்கும் ஏற்படும் என்றாலும் கூட பொதுவாக 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும். எனவே, குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications