டெல்லியில் நடுரோட்டில் இளைஞர் சரமாரி குத்திக்கொலை.. தப்பி ஓடிய கும்பல்.. பதைபதைக்கும் ஷாக் வீடியோ!
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
நெஞ்சை உறையவைக்கும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு;-

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மல்வியா நகரில் உள்ள மார்க்கெட் ஒன்றில் மயங்க் என்ற 25 வயது இளைஞர் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வரும் மயங்கிடம் அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் முற்றி கைகலப்பாகும் சூழல் ஏற்பட்டது.
தொடர்ந்து இங்கே நின்றால் ஆபத்து என்பதை உணர்ந்த மயங்க் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால், அப்போதும் விடாப்பிடியாய் துரத்திய அந்த கும்பல், மயங்கை சுற்றி வளைத்தது. மார்க்கெட் பகுதி என்பதால் அங்கு மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், இதையெல்லாம் பற்றி கவலைப்படாத அந்த கும்பல் மயங்கை சரமாரியாக கத்தியால் குத்தியது. அவ்வழியாக பைக்கில் சென்றவர்களும் சரி... அங்கு நின்றவர்களும் சரி... இதை வேடிக்கை பார்த்ததுதான் கொடுமையிலும் கொடுமை...
மயங்கை கத்தியால் குத்திவிட்டு மின்னல் வேகத்தில் அந்த கும்பல் தப்பி ஓடியது. கத்தியால் குத்தப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மயங்கை அங்கிருந்தவர்கள் உதவியுடன் மீட்ட அவரது நண்பர் அருகில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் மயங்க் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் நடுரோட்டில் இளைஞரை குத்திக்கொன்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் பரபரப்பு மிக்க சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் வெளியான நிலையில், இதை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications