"மன நிம்மதி போய் விட்டது.. தலைவர் பதவி ஏற்றதில் இருந்தே மன உளைச்சலில் உள்ளேன்.." அன்புமணி ஆதங்கம்
தர்மபுரி: பாமகவில் கடந்த சில காலமாகவே ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். இதற்கிடையே தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் பதவியை ஏற்றதில் இருந்தே தனக்கு மனநிம்மதி போய்விட்டதாகக் கூறியிருக்கிறார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் தற்போது கட்சித் தலைவராக இருக்கும் அன்புமணிக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதை பாமக நிர்வாகிகள் மறுத்தாலும் கூட பொது நிகழ்ச்சிகளில் நடந்த சில சம்பவங்களே அதற்குச் சாட்சியாக இருந்தது.

பாமக
இருவரும் பொதுவெளியிலேயே விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதனால் பாமக நிர்வாகிகள் குழப்பத்திலும், மனவேதனையிலும் உள்ளனர். இந்தச் சூழலில் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர், பாமகவின் தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து மன நிம்மதி போய் விட்டதாகக் கூறியிருக்கிறார்.
நிம்மதியே இல்லை
இந்த பொதுக் கூட்டத்தில் பாமக தொண்டர்கள் பல நூறு பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி பல்வேறு கருத்துகளைக் கூறியிருந்தார். இது தொடர்பாக அன்புமணி பேசுகையில், "பாமகவின் தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து மன நிம்மதி போய் விட்டது.. தலைவர் பதவி ஏற்றதில் இருந்தே மன உளைச்சலில் உள்ளன்" என்று கூறியிருந்தார்.
அன்புமணி ராமதாஸ் சொல்வது என்ன
தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவு கொண்டு வர வேண்டும். அதற்காகத் தான் ஜூலை 25ம் தேதி ராமதாஸ் பிறந்த நாளன்று ஒரு நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இந்த கொடுங்கோல் ஆட்சி, சமூத நீதிக்கு எதிரான ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்றி.. நாமே தமிழகத்திற்கு நல்லாட்சியை அமைக்கலாம் மக்களே ஒன்று கூடுங்கள் என்ற நோக்கத்தில் தான் நடைப்பயணம் செல்லவுள்ளேன். இந்த 100 நாள் நடைப்பயணத்தில் நான் மாநிலம் முழுக்க செல்லவுள்ளேன்.
நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதே இந்த நடைப்பயணத்தின் நோக்கம். அரசியல் சாசனத்தில் நமக்குப் பல உரிமைகள் உள்ளன. ஆனால், அந்த உரிமை என்ன என்பதே பலருக்கும் தெரிவதில்லை. அதை மீட்டெடுக்க முதலில் உரிமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே இந்த நடைப்பயணத்திற்குத் தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் என்று பெயர் வைத்திருக்கிறோம்" என்றார்.
மாறி மாறி விமர்சனம்
பாமக தலைவர் பதவியில் இருக்கும் அன்புமணியை நீக்குவதாகவும் தானே தலைவர் பதவியை ஏற்பதாகவும் ராமதாஸ் முன்பு அறிவித்திருந்தார். இருப்பினும், தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பது போலக் கூறிய அன்புமணி, தானே கட்சித் தலைமை பதவியில் தொடர்வதாகத் தெரிவித்தார். இருவரும் இதுபோல எதிரும் புதிருமாகவே கருத்துகளைக் கூறினர்.
இதற்கிடையே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அன்புமணி பேசியிருந்தார். மேலும், தந்தையிடம் மன்னிப்பு கேட்பதில் தவறு இல்லை என்றும் கூறியிருந்தார். அதேநேரம் அப்போதும் கட்சித் தலைவர் நான் என்பது போலப் பேசியிருந்தார். அதேநேரம் ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் மாறுவதாக இல்லை. அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மோதல் முடியும் என்பது போல கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications