வாகன ஓட்டிகளே.. இன்னும் 3 நாள் தான் டைம்.. பெர்மிட்டே போயிடும்.. ஆர்டிஓ எச்சரிக்கை
தருமபுரி: வருகிற ஜூன் 29-ந் தேதிக்குள் காலாண்டு சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என்று தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதுமே காலாண்டு சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக சாலை வரி ஒவ்வொரு காலாண்டுக்கும் செலுத்தப்பட வேண்டும். அப்படி சாலை வரி செலுத்தாத வாகனங்கள் பொது சாலையில் இயக்கப்பட்டால் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு காலாண்டு (வருகிற 30.6.2023 வரை) சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள், தேசிய அனுமதிச்சீட்டு சரக்கு வாகனங்கள் மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50 சதவீத அபராதத்துடன் வரி செலுத்த வேண்டிய கடைசி நாள் வருகிற 29.6.2023 ஆகும்.
எனவே, அனைத்து வாகன உரிமையாளர்களும் அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை இணையதள முகவரி (https://parivahan.gov.in) ஆன்லைன் மூலம் 50 சதவீத அபராதத்துடன் 29.6.2023க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தவறும் பட்சத்தில் 30.6.2023 க்கு பிறகு சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்படும். மேலும், சாலை வரி செலுத்தாத வாகனங்கள் பொது சாலையில் இயக்கப்பட்டால் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தவிர 2023-2024-ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பசுமை வரியை செலுத்தாமல் பொது சாலையில் இயக்குவது தெரியவருகிறது.
அவ்வாறு, 2023-2024-ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்கள் சாலை வரி செலுத்தாமல் பொது சாலையில் இயக்கப்பட்டால் வாகனங்கள் சிறைபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் 12 சதவீத வரியும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 15 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலாம கார்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீத வரியும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாலை வரி உயர்வு அமலாகும்போது, கார், இரு சக்கர வாகனங்களின் விலை கணிசமாக உயரும் என்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதலாக எட்டாயிரம் ரூபாய் வரையும், கார்களுக்கு கூடுதலாக, 25 ஆயிரம் ரூபாய் வரையும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications