ஒகேனக்கல் நீர்வரத்து 50,000 கன அடியாக உயர்வு! பேரருவிகள் ஆர்ப்பரிப்பு-90 அடியை தாண்டிய மேட்டூர் அணை!
தருமபுரி: காவிரி அணைகளில் இருந்து கர்நாடகா அரசு 80,000 கன அடிநீரை திறந்துவிட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டு எல்லையான ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து 50,000 கன அடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் 10-வது நாளாக அருவிகளில் பெருவெள்ளம் பாய்ந்தோடுகிறது. காவிரி நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியை தாண்டியுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கொட்டித் தீர்க்கிறது. இரு மாநிலங்களின் பல பகுதிகளுக்கும் இன்றும் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை ஏற்கனவே நிரம்பி வழிகிறது. அதேபோல காவிரியின் துணை நதியான கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கபினி அணையும் நிரம்பிவிட்டது.
கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து பெருமளவு நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 80,000 கன அடிநீர் திறக்கப்படுகிறது. இது 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு கர்நாடகா அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரியில் கர்நாடகா அரசு தொடர்ந்து நீர் திறந்துவிடுவதால் தமிழ்நாடு எல்லையான ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 50,000 கன அடியாக உள்ளது.
ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி ஆகியவற்றில் பேரிரைச்சலுடன் காவிரி பெருவெள்ளமாய் பாய்ந்தோடுகிறது. இதனால் இந்த அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் பல அடி உயர பாறைகளை மூழ்கடிக்கும் அளவுக்கு பெருவெள்ளம் பாய்ந்தோடுவதால் 10 நாட்களாக பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று 90 அடியை தாண்டிவிட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அடுத்த சில நாட்களில் 100 அடியை தாண்டும் எனபது எதிர்பார்ப்பு. இதனால் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்படும் நிலைமை உருவாகி உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதிதான் மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் திறந்துவிட முடியாத சூழ்நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications