ஒற்றை ஆளாக மொத்த மாவட்டத்தை தெறிக்கவிடும் திமுக எம்.பி... ஆய்வு என்றாலே வெலவெலக்கும் அதிகாரிகள்..!
தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வுக்கு வருகிறார் என்றாலே அரசு அதிகாரிகள் வியர்த்து விறுவிறுத்துப் போகின்றனர்.
அந்தளவிற்கு அவர்களிடம் செந்தில்குமார் எம்.பி. கேள்விக்கணைகளை வீசி குடைந்தெடுத்து விடுவார்.
தனது நிதியின் மூலம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்து அதில் குறைகள் இருப்பின் ஒப்பந்ததாரர்களை ஒரு வழி செய்து விடுவார்.

தரம் முக்கியம்
முதல்வன் திரைப்படத்தில் வரும் அர்ஜுனை போல் செந்தில்குமார் எம்.பி. காட்டும் அதிரடி ஆய்வுகளால் தருமபுரி மாவட்ட அரசு அதிகாரிகள் ஒரு வித பதற்றத்திலேயே இருந்து வருகின்றனர். சாலைப்பணிகளாக இருந்தாலும் சரி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகளாக இருந்தாலும் சரி அதில் தரத்தை எதிர்பார்ப்பவர் செந்தில்குமார்.

3 கி.மீ. தூரம்
தரமற்ற முறையில் தனது தொகுதியில் பணிகள் நடைபெறுவதாக புகார் கிடைத்தால் அடுத்த 3 மணி நேரத்தில் நிகழ்விடத்தில் ஆஜராகி விடுகிறார். கடத்தூர் ஒன்றியத்தில் புதிதாக போடப்பட்டு வரும் சாலை சல்லி சல்லியாக பெயர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த அவர் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்தே சென்று சாலையை பார்வையிட்டார்.

தரமற்ற சாலை
அப்போது பல இடங்களில் காலில் தேய்த்தாலே சாலை பெயர்வதை பார்த்து அதிர்ச்சியுற்ற அவர் ஸ்கேல் மூலம் அளவு எடுக்கத் தொடங்கினார். அரசு நிர்ணயித்துள்ள தடிமனை விட குறைவான அளவில் பல இடங்களில் சாலை அமைக்கப்பட்டிருந்ததால் சாலைப்பணி ஆய்வாளரை ஸ்பாட்டுக்கு வரவழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

அதிரடிகள்
செந்தில்குமாரின் ஆய்வுகளும், அதிரடிகளும் அதிகாரிகளுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும் தருமபுரி மக்களவைத் தொகுதிகுட்பட்ட இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். செந்தில்குமாருக்கு திமுகவை கடந்து கட்சி சாராத ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து அவர் பக்கம் நிற்கின்றனர்.












Click it and Unblock the Notifications