வன்புணர்வு பற்றி சொல்லவேயில்லை.. டிஎஸ்பி திட்டமிட்டு மறைத்தார்.. தருமபுரி மாணவியின் தந்தை கண்ணீர்
தருமபுரியில் பாலியல் கொடுமையால் பலியான 12ம் வகுப்பு மாணவியின் தந்தை தனது மகளின் மரணம் குறித்து பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார்.
தருமபுரி: தருமபுரியில் பாலியல் கொடுமையால் பலியான 12ம் வகுப்பு மாணவியின் தந்தை தனது மகளின் மரணம் குறித்து பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார். இதில் போலீஸ் உண்மையை மறைக்கவே தொடக்கத்தில் இருந்து முயல்கிறது என்றுள்ளார்.
தருமபுரி அருகே சிட்லிங் கிராமத்தை சேர்ந்த பிளஸ் டு மாணவி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட காரணத்தால் மரணம் அடைந்துள்ளார். இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரமேஷ் மற்றும் சதீஷ் என்று அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை மட்டும் கொடுக்கப்படவில்லை. அவள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். போலீசார்தான் தன்னை கட்டாயப்படுத்தி, மிரட்டல் உண்மையை மறைக்க வைத்தனர் என்று அந்த சிறுமியின் தந்தை பேட்டியளித்துள்ளார்.
போலீஸ் தன்னிடம் காசு வாங்கி கொண்டு தன்னை மிரட்டியதாகவும் அந்த சிறுமியின் தந்தை அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

என்ன நடந்தது
அண்ணாமலையின் பேட்டியில், எனது மகள் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த ஐந்தாம் தேதி அவர் மலம் கழிப்பதற்காக அருகில் இருந்த காட்டிற்கு சென்ற போது, ரமேஷ் மற்றும் சதீஷ் இருவரும் அவளை பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார்கள். அதோடு அவளை மோசமாக தாக்கியும் உள்ளனர்.

புகாரை எடுக்கவில்லை
இந்த நிலையில் இதுபற்றி நான் போலீசிடம் புகார் அளித்தேன். போலீஸ் என்னுடைய புகாரை எடுக்கவில்லை. அதன்பின் 1077 உதவி எண் மூலம் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதன்பின் மீண்டும் போலீசுக்கு சென்று புகார் அளித்தேன், அப்போதும் அவர்கள் புகாரை எடுக்கவில்லை. அதன்பின் கலெக்டர் ஆபிசில் இருந்து உத்தரவு வந்ததை அடுத்து என்னை அழைத்து புகாரை பெற்றுக் கொண்டார்கள்.

மறைக்க வைத்தார்
அதே சமயம் அந்த போலீஸ் நிலைய டிஎஸ்பி என்னை அழைத்து, வன்புணர்வு என்று எங்கேயும் சொல்ல கூடாது, பாலியல் தொல்லை என்று கூட சொல்லலாம், வன்புணர்வு என்று சொல்ல கூடாது என்று மிரட்டினார். மருத்துவமனையில் சேர்க்கும் போது கூட வன்புணர்வு குறித்து எந்த விஷயத்தையும் சொல்ல அனுமதிக்கவில்லை.

பலியானாள்
அதன்பின் வெறும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்துவிட்டு அவளை காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். ஆனால் அவளுக்கு தொடர்ந்து உடலில் பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் அவளுக்கு வாந்தி வந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றோம். மருத்துவமனைக்கு சென்று அனுமதித்த சில நிமிடத்தில் அவள் பலியாகிவிட்டாள்.

வேண்டுமென்று தப்பவிட்டனர்
எனது மகளை வன்புணர்வு செய்த ரமேஷின் தாயார் மது வியாபாரம் செய்கிறார். அவர் போலீசுக்கு நெருக்கம் என்பதால் அவர்கள் இருவரையும் போலீஸ் தப்பவிட்டு இருக்கிறது. போலீஸ் வேண்டும் என்று குற்றவாளிகளை தப்பவிட்டு உள்ளது. என் மகளை இழந்துவிட்டு, நீதியையும் இழந்துவிட்டு நிற்கிறேன் என்று அந்த சிறுமியின் தந்தை அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications