தர்மபுரியில் துண்டான தும்பிக்கை.. கொடூரர்கள் நடத்திய களியாட்டத்தால் பொதுமக்கள் கொந்தளிப்பு!
தரம்புரி: யானையின் தும்பிக்கையை வெட்டி கொடூரமாக கொன்று, தந்தங்களை மர்ம கும்பல் கடத்தி சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காடுகளின் பாதுகாவலாக யானைகள் இருந்து வரும் நிலையில், இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று சூழலியலாளர்கள் மட்டுமல்லாது தர்மபுரி பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே இந்த கொடூரம் நடந்திருக்கிறது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4,497 சதுர கிலோமீட்டர்கள். இதில் காடுகளின் பரப்பளவு மட்டும் 2,700 சதுர கிலோமீட்டர்கள். அதாவது ஏறத்தாழ 60% அளவுக்கு இந்த மாவட்டத்தில் காடுகள் இருக்கின்றன. இந்த காடுகளின் பிரதான விலங்கு யானைதான். தர்மபுரியின் அடையாளமாக யானைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் இங்கு யானை வேட்டை பெரிய அளவில் நடந்து வந்தது. இன்று வனத்துறை கட்டுப்பாடு காரணமாக வேட்டை சுருங்கியுள்ளது.

இருப்பினும் வேட்டை நடத்தப்படுவது கட்டுப்படுத்தப்படவில்லை. அந்த வகையில் நேற்று நடந்த யானை வேட்டை சூழலியலாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.
ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏமனூர் பகுதியில் காப்புக்காடு இருக்கிறது. இந்த காட்டில் சுமார் 20 கி.மீ தொலைவில் யானையின் சடலம் ஒன்று கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு யானையின் சடலம் அழுகிய நிலையில் இருந்திருக்கிறது. உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தபோது யானை கொல்லப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
யானையின் தந்தம் கடத்தப்பட்டிருக்கிறது. தந்தத்தை எடுக்க யானையின் தும்பிக்கையை அறுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்/வனத்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த நாளில் இந்த பகுதியில் ஆக்டிவாக இருந்த செல்போன் எண் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதை வைத்து சந்தேக நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பவம் நடந்த இடம் கர்நாடகா-தமிழ்நாடு எல்லைப்பகுதி என்பதால், வேட்டையர்கள் கர்நாடகாவில் பதுங்கியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், "காடுகள் உருவாக காரணமே யானைகள்தான். காடுகள்.. காடுகளாக இருப்பதற்கு யானைகள் பெரிய அளவில் பங்களிக்கின்றன. 150-300 கிலோ வரை ஒரு நாளைக்கு யானை தங்கள் உணவை எடுத்துக்கொள்கின்றன. இதில் பெரும்பாலும் பழங்கள்தான் இருக்கும். யானைகளுக்கு கை கிடையாது.. எனவே நம்மை போல, பழத்தில் உள்ள கொட்டைகளை அகற்ற முடியாது. அப்படியே சாப்பிட்டுவிடும்.
சாப்பிட்ட கொட்டைகள் அதன் கழிவுகளில் வெளியேறும். கழிவுகளோடு விதைகள் மண்ணில் விழுவதால் அது இயற்கையாகவே உரத்தை பெற்றுவிடுகிறது. அப்புறம் என்ன? மளமளவென வளர்ந்து மரமாகிவிடுகிறது. இப்படி காடுகளை உருவாக்க யானைகள் உதவுகின்றன. அதேபோல யானைகள் நடக்கும் பாதைகள் சிறிய உயிர்களுக்கு வழித்தடமாக மாறிவிடுகிறது.
கோடை காலத்தில் நீர் எங்கு கிடைக்கும் என்பது யானைகளுக்கு நன்றாக தெரிந்திருக்கும். மட்டுமல்லாது மோப்ப சக்தி அதிகம் என்பதால் தண்ணீரை எளிதில் யானைகள் கண்டுபிடித்துவிடும். சில பறவைகளும், சிறிய மிருகங்களும் நீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க யானைகளை பின்தொடர்வது உண்டு. இப்படி பல வகையில் காடுகளுக்கு உதவும் யானைகளை அதன் தந்தத்திற்காக வேட்டையாடுவது என்பது மனிதாபிமானமற்ற செயல்" என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications