ஒகேனக்கலில் உவ்வே.. சட்டியில் கருப்பா கொழ கொழன்னு! ஆடிப் போன அதிகாரிகள்.. பாவம்யா நம்ம டூரிஸ்ட்ஸ்!
தருமபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்தினர். அதில் சில கடைகளில் மீன் வறுவலுக்கு மீண்டும் மீண்டும் உபயோகித்த எண்ணெய் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு தரமற்ற மீன்கள் அழிக்கப்பட்டன. ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தர்பூசணி ஆப்பிள் உள்ளிட்டவை அழிக்கப்பட்ட நிலையில் தற்போது தர்மபுரியில் கெட்டுப் போன மீன்களும் அழிக்கப்பட்டுள்ளன.
கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக பழ விற்பனை கடைகள், குளிர்பான கடைகள் முளைத்திருக்கின்றன. அங்கு தர்பூசணி, ஆப்பிள், மோர், லெமன் ஜூஸ், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றில் கலப்படம் மற்றும் ரசாயனம் கலந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் நடத்தப்பட்ட சோதனையில் ரசாயனம் கலந்த எட்டாயிரம் கிலோ தர்பூசணி மற்றும் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள் பழங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
அடுத்த அதிரடியாக தற்போது ஒகேனக்கல் பக்கம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கவனம் சென்று இருக்கிறது. தற்போது வெயில் காலம் அதிகரித்திருக்கும் நிலையில் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். குடகு மலையில் உருவாகும் தலைக்காவிரி தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடந்தான் ஒகேனக்கல். இளம் சூடான எண்ணெயில் மசாஜ் செய்து விட்டு சுழன்றாடும் பரிசலில் சவாரி செய்து ஆர்ப்பரிக்கும் அருவியில் குளித்துவிட்டு ஒகேனக்கல் மீன் குழம்பு ருசித்தால் ஆகா சொல்லவே வார்த்தை இல்லை.
ஆர்ப்பரிக்கும் அருவிக்கு அருகே குவிந்து கிடக்கும் பரிசல்களை விட அதிகம் இருப்பது மீன் கடைகள்தான். காவிரி கரையில் பிடிக்கப்பட்ட மீன்களை குவித்து வைத்திருக்க, நமக்கு பிடித்த மீன்களை எடுத்துக் கொடுத்தால் கண் முன்னே மசாலா பொருட்களை அரைத்து மீன் குழம்பும் சாதமும் மீன் வறுவல் சுட சுட செய்து கொடுப்பார்கள். காலையில் குளித்து விட்டு உணவு வகைகளை ஆர்டர் செய்து விட்டு மீண்டும் திரும்பினால் சூடான சாதத்தில் சுவையான மீன் குழம்பை சாப்பிடுவதே தனி சுகம். இதற்காகவே அங்கு அதிகம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இந்த நிலையில் அங்கும் சில பிரச்சனைகள் இருப்பதாக சுற்றுலா பயணிகள் தொடர்ந்து புகார்களை முன் வைத்தனர். மீன்கள் தரமற்றிருப்பதாகவும், தரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதை அடுத்து பென்னாகரம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒகேனக்கலில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அதில் பல கடைகளில் கெட்டுப்போன மீன்களும் காலாவதியான பொருட்களை வைத்து சமையல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 13 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மீன் விற்பனை கூடம், குளிர்பான கடைகள், முதலை பண்ணை பகுதி ஆகிய பகுதிகளில் மீன் வறுவல் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது மீன் வறுவலுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெய், மீண்டும் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. கருப்பு நிறத்தில் தார் போன்று இருந்த எண்ணெயை கொட்டி அழித்த அதிகாரிகள் மீண்டும் இதே போல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் மீன் வறுவல் கடைகள் மற்றும் குளிர்பான கடைகள் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டதோடு, மீன்களை எப்படி வாங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.












Click it and Unblock the Notifications