வனப்பகுதியில் இருந்து பூர்வகுடிமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறை.. பென்னாகரம் அருகே ஷாக்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் இருந்த பூர்வகுடிமக்களை வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடுகளில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசியதோடு, பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற வைத்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாகவே வனப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்கள், கால்நடை வளர்ப்பவர்களை வெளியேறுமாறு வனத்துறை அறிவுறுத்தி வருகிறது.

கடந்த மாதம் பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை வனத்துறையினர் வெளியேற சொன்னதால், அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று ஒக்கேனக்கல் அருகே உள்ள மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
மீனவர்களாகவும் கல்நடை வளர்ப்பு உள்ளிட்ட வேலைகளிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று வலுக்கட்டாயமாக பூர்வகுடி மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வீடுகளில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசியதோடு, பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற வைத்தனர். இதில் சில பெண்களுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் அராஜ போக்குடன் வலுக்கட்டாயமாக பூர்வ குடிமக்களை வெளியேற்றிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வனத்துறையினரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். வனத்துறையில் இருக்கும் மக்களை இப்படி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள மீனவர்கள், கால்நடைகளை வளர்ப்பவர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு மாற்று வழிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது ஏற்புடையது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications