ஒரே நாளில் பயிர்க்கடன்.. ஸ்டாலின் தொடங்கிய திட்டம்.. வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் விஷயம்
தர்மபுரி: பயிர்க்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு செல்லாமலே அருகில் உள்ள இ-சேவை மையத்தில் சென்று இணையதளத்தில் விண்ணப்பித்த அன்றைய தினமே பயிர்க்கடன் வழங்கப்படும் புதிய திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் பயிர்க்கடன் பெறும் இந்த திட்டம் 134 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிளுக்காக தமிழக அரசும் மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறைந்த வட்டியில் பயிர்க்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி, பயிர்களுக்கு காப்பீடு, ஆண்டுக்கு 6000 உதவி தொகை, மானிய விலையில் உரம், விவசாய இடுபொருள்களுக்கு மானியம் என பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 15 ஆயிரத்து 62 கோடி ரூபாய்க்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி பயிர்க்கடன் இலக்கும், ரூ.3 ஆயிரம் கோடி கால்நடை பிரிவின் கீழ் கடனும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி, பயிர்க்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு செல்லாமலே அருகில் உள்ள இ-சேவை மையத்தில் சென்று இணையதளத்தில் விண்ணப்பித்த அன்றைய தினமே பயிர்க்கடன் வழங்கப்படும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 17-ந்தேதி தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 125 பேர் மட்டுமே விண்ணப்பித்து கடன் பெற்றுள்ளனர். தற்போது வரை இந்த திட்டமானது முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த தர்மபுரி மாவட்டத்தின் ஒரே ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
அந்த மாவட்டத்தில் எஞ்சி உள்ள 134 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இந்த மாதம் இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் இந்த புதிய திட்டத்தின் மூலம் பயிர்க்கடன் பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கு கட்டமைப்பு ரீதியாக நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆகும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications