போலீஸ் உடையில் கோவிலில் நுழைந்த இளைஞர்.. 2 பெண்களை வெட்டியதால் அதிர்ந்த தர்மபுரி.. யார் இவர்?
தர்மபுரி: தர்மபுரியில் தலைமை காவலர் சீருடை அணிந்து கோவிலில் இருந்த பெண் உள்பட 2 பெண்களை வெட்டிய இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி குமாரசாமி பேட்டையில் நேற்று இளைஞர் ஒருவர் சத்தம்போட்டபோடி தெருக்களில் ஓடினார். அவர் போலீஸ் ஏட்டு உடையை அணிந்திருந்தார்.
இதனால் அந்த இளைஞர் யார்? எதற்காக சத்தம் போட்டபடி ஓடுகிறார்? என்பதை நினைத்து மக்கள் குழப்பமடைந்தனர். மேலும் அந்த இளைஞரின் நடத்தையில் சந்தேகம் இருந்தது.

இதனால் அவரை பிடித்து பொதுமக்கள் விசாரிக்க முயன்றனர். அப்போது அந்த இளைஞர் அங்குள்ள இளநீர் கடையில் இருந்த அரிவாளை எடுத்து மக்களை வெட்ட தொடங்கினர். ஜெபகனி என்ற பெண்ணின் கைவிரல்களை அந்த நபர் வெட்டினார். மேலும் அங்குள்ள சிவசுப்பிமணியன் கோவிலுக்குள் நுழைந்த நபர் ராஜேஸ்வரி என்ற பெண்ணையும் வெட்டினார்.
இதனால் பொதுமக்கள் பேரதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து இளைஞரை மடக்கி பிடித்து கோவிலில் உள்ள அறையில் அடைத்து வைத்தனர். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அறையின் கதவை திறந்து அந்த இளைஞரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் அவர் போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர் தூத்துக்குடி மாவட்டம் செம்மரிகுளத்தை சேர்ந்த சித்திக் விக்னேஷ் என்பதும், அவர் ஓசூரில் துணி துவைத்து காயவைக்கப்பட்டு இருந்து போலீஸ் ஏட்டுவின் சட்டையை திருடி அணிந்து கொண்டு 2 பெண்களை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ற சந்தேகமும் உள்ளது. அதுபற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications