மோடி தர்மபுரியில் போட்டியிட தயாரா? பாஜகவுக்கு 3 சவால்! அண்ணாமலையை சாடிய திமுகவின் செந்தில் குமார்
தர்மபுரி: பிரதமர் நரேந்திர மோடி தர்மபுரியில் போட்டியிட தயாரா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தமிழ்நாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பிய திமுக எம்பி செந்தில் குமார் பாஜகவுக்கு 3 சவால்களை விடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் செந்தில் குமார். இவருக்கு பாஜக தலைவர்கள் இடையே அடிக்கடி வலைதளங்களில் கருத்து மோதல்கள் என்பது நடந்து வருகிறது.

செந்தில் குமார் எம்பி பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக 3 மாநிலங்களில் வென்றது தொடர்பாக செந்தில் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக செந்தில் குமார் நாடாளுமன்றத்தில் இந்தி பேசும் மாநிலங்களை மாட்டு மூத்திரங்கள் என கூறியிருந்தார்.அதாவது ‛‛இந்தி பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் வெல்வதுதான் பாஜகவின் பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவாக கவ் மூத்ரா என்று சொல்வோம்'' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
செந்தில் குமார் எம்பியின் இந்த கருத்தை பாஜகவினர் கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து செந்தில் குமார் எம்பி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இப்படி தேசிய அளவிலும் சரி, தமிழ்நாட்டு அரசியலும் சரி செந்தில் குமார் மற்றும் பாஜக தலைவர்கள் இடையே கடும் மோதல் என்பது இருந்து வருகிறது. இந்நிலையில் தான் செந்தில் குமார் எம்பி பிரதமர் மோடி முதல் அண்ணாமலை வரை பாஜகவுக்கு 3 முக்கிய சவால் விடுத்துள்ளார்.
அதாவது தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று செந்தில் குமார் எம்பி பங்கேற்றார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் தான் செந்தில் குமார் 3 சவால்களை விடுத்தார். இதுதொடர்பாக செந்தில் குமார் கூறியதாவது:பாஜகவுக்கு நான் 3 சவால்களை விடுக்கிறேன்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து பிரதமர் மோடி போட்டியிட தயாரா? இது முதல் சவால். 2வது சவால் என்பது அண்ணாமலைக்கு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்க தைரியம் இருக்கிறதா? அப்படியே நின்றாலும் அவர் வெற்றி பெற்று காட்டட்டும்? அவரால் ஜெயிக்க முடியாது என்பதை தான் நான் சொல்கிறேன்.
3வது சவால் என்பது தர்மபுரியில் பாஜகவின் வேட்பாளர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நின்று டெபாசிட் வாங்கி காட்டட்டும் என கூறியுள்ளார். செந்தில் குமார் எம்பியின் இந்த சவாலுக்கு அண்ணாமலை உள்பட பாஜக தலைவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications