பிரேமலதாவை தொடர்ந்து கனிமொழியும்.. சசிகலாவுக்கு "பச்சைக்கொடி".. சூடு பிடிக்கும் அரசியல் களம்
தருமபுரி: சசிகலா அரசியலுக்கு வரலாம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தருமபுரியை அடுத்த பழைய தருமபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி அளித்த பேட்டியில் கூறுகையில் தமிழக அளவில் 85 சதவீதமாக உள்ள கல்வியறிவு, தருமபுரி மாவட்டத்தில் 67 சதவீதமாக உள்ளது.
இதன் மூலம் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், தன் மாவட்டத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். குடிமராமத்து பணிகள் நடக்காமல் பல இடங்களில் குளங்கள் மூடப்பட்டு, பிளாட் போட்டு விற்கிறார்கள்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் பிற பகுதிகளில் தொடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மதுரையில் இப்பணி இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பது ஓபிஎஸ்ஸின் கனவாக உள்ளது.
குழப்பம்
அவரது கட்சியில் உள்ள குழப்பங்களை சரி செய்தாலே ஓரளவுக்காவது வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்கலாம். யார் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அக்கட்சியின் முடிவு. சசிகலா அரசியலுக்கு வரலாம், வேண்டாம் என நான் கூறவில்லை, கூறவும் முடியாது என்றார் கனிமொழி.
அதிமுக பொதுச் செயலாளர்
பிரேமலதா, கனிமொழி உள்ளிட்ட பெரும்பாலானோர் சசிகலா அரசியலுக்கு வரலாம் என்கிறார்கள். அவரும் அதிமுகவை தலைமையேற்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பல வியூகங்களை வகுத்து வருகிறார். முதலில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை தன் வசமாக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
தகவல்கள்
அது முடியாவிட்டால் அமமுகவின் தலைவராக பொறுப்பேற்று திமுகவை ஓரங்கிவிட்டு இரண்டாவது இடத்தை பிடிப்பது என்ற முயற்சியில் சசிகலா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என சசிகலா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.