கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
தருமபுரி: மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற பூமி ஈஸ்வரர் கோயிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார். செஞ்சி மஸ்தான் கோயிலில் பிரார்த்தனை செய்தது மத நல்லிணக்கத்தை காட்டும் விதமாக இருந்தது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து உள்ளது. நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மாநில அமைச்சர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், திமுக கூட்டணியில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து இன்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார். மரக்காணம் பேரூராட்சியில் உள்ள தர்மபுரி வீதி, புதுவை சாலை, சன்னதிவீதி, மேலவீதி, அழகன் குப்பம், தாழங்காடு, மாதா கோயில், மாரியம்மன் கோயில் வீதி, சால்ட் ரோடு, மண்ட வாய், கழிகுப்பம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு வீதியாக சென்று பானை சின்னத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற பூமி ஈஸ்வரர் கோயிலில் அமைச்சர் மஸ்தான் வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பானை சின்னத்தை வைத்து பூஜை செய்தனர். தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் செஞ்சி மஸ்தான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஆவார்.
எனினும், கோயிலில் பிரார்த்தனை செய்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரசாரம் தொடங்கியது மத நல்லிணக்கத்தை காட்டும் விதமாக இருந்தது. அதேபோல், மரக்காணத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய அமைச்சர் மஸ்தான் மரக்காணம் - புதுவை சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் அவரே தனது கையால் டீ போட்டு வேட்பாளர் ரவிக்குமாருக்கு கொடுத்தார்.
இதேபோல் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர் போட்ட டீயை ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர் கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.












Click it and Unblock the Notifications