மயக்கம் வருதாம்மா? பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரெடியா இருக்கு! தவெக ஆர்ப்பாட்டத்தில் கெஞ்சிய நிர்வாகி
தருமபுரி: "யாருக்காவது தலைச்சுற்றல், மயக்கம் வர மாதிரி இருந்தா உடனே வெளியே வந்துடுங்க, பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரெடியாக இருக்கு" என கரூர் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு, தவெக ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தாபா சிவா மைக்கில் அறிவுறுத்தினார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 அல்லது 5 மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என ஒன்று தமிழகத்தில் நடந்து வருகிறது. இதற்காக பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாக வந்து விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள்.
அதிலும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வரும் நிலையில் 6 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழகத்தில் எப்படி ஒரே மாதத்தில் அனைத்து வாக்காளர்களையும் சரி பார்த்துவிட முடியும் என்பதுதான் திமுக, கூட்டணி கட்சிகள், தவெக உள்ளிட்டவைகளின் கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண் ராஜ், ராஜ் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் தருமபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் மாவட்டச் செயலாளர் தாபா சிவா கலந்து கொண்டார். அங்கு ஏராளமான கூட்டம் கூடியது. இதையடுத்து பெண்கள் இருக்கும் பகுதிக்கு வந்த சிவா, யாருக்காவது தலைச்சுற்றல், மயக்கம் இருந்தால் உடனே கூட்டத்தை விட்டு தயவு செய்து வந்துவிடுங்கள்.
உங்களை கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு" என அழைத்தார். கரூர் கூட்ட நெரிசலில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க, மக்கள் கூட்டம், காலை முதலே உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் வந்ததும் கூட்ட நெரிசல் அதிகரித்து பலருக்கு மூச்சுவிட முடியாமல் கீழே மயங்கி விழுந்தனர். அப்போது அங்கும் இங்கும் சிதறி ஓடியதில் 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் விஜய்க்கு பெரிய மைனஸாக உள்ளது.
இதுவரை எத்தனையோ அரசியல் கூட்டங்களை பார்த்துள்ள தமிழகத்தில் இது போன்ற ஒரு அசம்பாவிதம் என்பது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது போல் தவெகவுக்காக கூடும் கூட்டங்களில் அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்பதால் தருமபுரி மாவட்டச் செயலாளர் சிவா முன் கூட்டியே யாருக்காவது மயக்கம் இருக்கிறதா என கேட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் எஸ்ஐஆரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். எஸ்ஐஆரில் உள்ள அவலங்களை எடுத்துரைக்க இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானோர் திரண்டு வந்துள்ளனர்.
மக்கள் வாழ்வாதாரத்திற்காக தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம், மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் எஸ்ஐஆரை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் எஸ்ஐஆரை உள்ளே நுழைய விடமாட்டோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னாரே இப்போது வந்துள்ளதே இதற்கு பதில் சொல்வாரா?
மக்களை எப்படி வேண்டுமானாலும் மடை மாற்றிவிடலாம் என்கிற ஒற்றை நம்பிக்கையுடன் மறைமுகமாக எஸ்ஐஆரை ஆதரித்து, மக்கள் மத்தியில் எதிர்ப்பதாக வேஷம் போடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications