பட்டா மாறுதலுக்கு! ரூ 5 ஆயிரம் கேட்ட விஏஓ! ரசாயன நோட்டுக்களால் விஜிலென்ஸில் சிக்கிய பிரபு!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் பட்டா மாறுதலுக்கு ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கையும் களவுமாக போலீஸாரிடம் பிடித்துள்ளார். அண்மைக்காலமாக இது போல் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கும் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (40). இவர் பாலக்கோட்டை அடுத்த மாரண்டஹள்ளி நகரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
பட்டா மாற்றம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக விஏஓ பிரபு கேட்டதாக தெரிகிறது. முதல் கட்டமாக ரூ 3 ஆயிரத்தை கணேசன் கொடுத்திருந்த நிலையில் மேலும் ரூ 2 ஆயிரம் கொடுத்தால்தான் பட்டா மாற்றம் செய்ய முடியும் என பிரபு கூறினாராம்.
ரூ 3 ஆயிரம் கொடுத்தும் மேலும் பணம் கேட்கிறாரே என வேதனையடைந்த கணேசன், தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கணேசனிடம் ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் ரசாயனம் தடவி கொடுத்து அனுப்பினார்.
அந்த பணத்தை பெற்ற கணேசன், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த விஏஓ பிரபுவிடம் போய் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், பிரபுவை கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியின் போது மது போதையில் இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியில் இணைந்தாராம். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னொரு சம்பவம்: திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டியை சேர்ந்த மகேஷ்வரன். இவர் விவசாயி. பட்டா மாறுதலுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாராம். இது குறித்து சிலுவத்தூர் விஏஓ முகமது ஜக்காரியாவை , மகேஷ்வரன் அணுகியதாக சொல்லப்படுகிறது.
பட்டா மாறுதலுக்கு ரூ 3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என ஜகாரியா கேட்டாராம். அவ்வளவு பணத்தை லஞ்சமாக கொடுக்க இயலாததால் மகேஷ்வரன், லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரையின் படி லஞ்ச பணத்தில் ரசாயனம் தடவி , அந்த பணத்தை ஜக்காரியாவிடம் கொடுக்கச் செய்து அவரை கைது செய்தனர்.
அது போல் கோவையில் வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கியதாக விஏஓ, போலீஸாருக்கு பயந்து குளத்தில் குதித்து தப்ப முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். அவர் குளத்தில் வீசிய பணத்தையும் போலீஸார் தேடி எடுத்தனர். கோவை பேரூரை அடுத்த ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை (35) அணுகியபோதுதான் இது போல் ஒரு சம்பவம் நடந்தது.












Click it and Unblock the Notifications