கொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்!
- ஆர்.மணி
சென்னை: இன்று கொரேனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அநேகமாக கொரோனாவால் பாதிக்கப் படாத நாடுகளே இன்று இல்லை என்றே சொல்லலாம். இதில் ஒட்டு மொத்த மனித குலமே சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஆண்கள், பெண்கள், திருநங்கைள், குழந்தைகள், இளம் வயதினர், வயோதிகர்கள் என்று பாலின வேறுபாடுகளும், வயது வித்தியாசங்களும் இல்லாமல் அனைத்து தரப்பினருமே பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் சிலரது துயரங்கள் மற்றவர்களது துயரங்களில் இருந்து வேறுபட்டதாக மட்டுமல்லாமல், சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டிய அளவுக்கு ஈர்க்காதவையாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.
அதில் ஒன்றுதான் மாற்றுத் திறனாளிகளின் கஷ்டங்கள். ஆம் … மற்றவர்களின் துன்பங்களில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் கஷ்டங்கள் சற்றே கூடுதலானதாகவே தான் இருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளில் பலரும் இன்னொருவரின் துணையுடனேயே அன்றாட வாழ்கையை நடத்திச் சென்று கொண்டிருக்கின்றனர். இங்குதான் சிக்கலே வருகிறது.

துன்பத்தின் மையக் கரு
மாற்றுத் திறனாளிகளுக்கு உறுதுணையாக அவர்களுக்கு உதவிக் கொண்டிருப்பவர்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத சூழல் இருப்பதுதான் துன்பத்தின் மையக் கருவாக இருந்து கொண்டிருக்கிறது. பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது, தனியாக வாகனம் இல்லாமல் இருப்பது, இவை எல்லாவற்றையும் விட போலீஸ் கெடுபிடி மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்களை வீட்டை விட்டு வெளியே வராமல் செய்து கொண்டிருக்கிறது.
இது மாற்றுத் திறனாளிகளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது..

உதவி தேவைப்படுவோர்
"என்னுடைய தேவைகளுக்கு உணவு, மருந்து பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை கொடுத்த வந்த கடைகள் முற்றிலுமாக நிறுத்தி விட்டன. கொடுத்து அனுப்ப ஆட்கள் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர். என்னுடைய உதவியாளர் எனது வீட்டிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கொண்டிருக்கிறார். அவரால் என் வீட்டுக்கு வர முடியவில்லை. அவர் சைக்களில் வர முடியும். ஆனால் போலீஸின் லத்திகளுக்கு பயந்து அவர் வருவதை நிறுத்தி விட்டார். போலீசிலிருந்து அனுமதி கடிதம் வாங்கித் தரவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அப்படியே போலீஸின் அனுமதி கடிதம் கிடைத்தாலும் என்னுடயை உதவியாளருக்கு அதனை எப்படி அனுப்புவது என்று எனக்கு தெரியவில்லை.

பார்வை இல்லாதவர்கள்
அக்கம் பக்கத்தில் உள்ள சில மனிதாபினம் மிக்க மனிதர்கள் எனக்கு உணவும், அத்தியாவசிய மருந்துகளும் கொடுத்துக் கொண்டிருப்பதால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று சொல்லுகிறார் கொல்கத்தாவில் இருக்கும் 40 வயது மதுமிதா பாசு. சென்னையை சேர்ந்த நீலகண்டனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. "நான் மாற்றுத் திறனாளி. பார்வை இல்லாத மாற்றுத் திறனாளி. டில்லிக்கு விமானத்தில் சிவில் சர்வீஸ் படிப்புகாக சென்றேன். என்னை அங்கு வந்து அழைத்துச் செல்லுவதாக வாக்குறுதி அளித்திருந்த உதவியாளர் வரவில்லை. பத்து மணி நேரம் டில்லி விமான நிலையத்திலேயே காத்துக் கிடந்தேன். பின்னர் டில்லி காவல்துறையின் ஏற்பாட்டில் வந்த தன்னார்வ குழு ஒன்றின் தொண்டர் ஒருவர் என்னை நான் தங்க ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்" என்கிறார் நீலகண்டன்.

12 லட்சம் பேர்
நாம் தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலே கூட மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே 12 லட்சமாக இருக்கிறது. இதில் சுமார் 6 லட்சம் பேர் தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்து ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மீதமுள்ள 6 லட்சம் பேர் பற்றிய எந்த முறையான புள்ளி விவரமும் மாநில அரசிடமும் இல்லை. தனியார் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. "இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக சலுகைகளை கொடுத்துக் கொண்டிருப்பது தமிழகம் தான். ஆனால் இந்த 21 நாள் ஊரடங்கு மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை மிகவும் பாதித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பார்வையற்றவர்களின் நிலைமை மிகவும் கொடூரமானது. கணவன், மனைவி இருவருமே பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ரயில்களில் பல பொருட்களை விற்று வாழ்கையை ஓட்டுகின்றனர். இன்று அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

21 வகை குறைபாடு கொண்டோர்
எவரையும் தொட வேண்டாமென்கிறது அரசு. தொடு உணர்வால் மட்டுமே வாழ்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பார்வையற்றவர்களின் நிலைமையை தயை கூர்ந்து நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்" என்கிறார், டிசம்பர் 3 இயக்த்தின் ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான தீபக்நாதன்.. மாற்றுத் திறனாளிகள் எனும்போது அதில் 21 வகை குறைபாடுகள் வருகின்றன. இதில் மன வளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்குவாதம், ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் குறைபாடுகளை கொண்டவர்கள் இருக்கின்றனர். இதற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் திடீரென்று சிகிச்சையை நிறுத்தினால் அதனால் வரும் உடல் மற்றும் மன குறைபாடுகள் ஆபத்தானவையாக கருதப் படுகின்றது. இன்று 21 நாட்கள் ஊரடங்கு இத்தகைய சிகிச்சை பெற்று வருபவர்களின் வாழ்கையை கடுமையாக பாதிக்கத் தொடங்கியிருக்கிறது என்று கூறுகிறார் மற்றோர் மாற்றுத் திறனாளி செயற்பாட்டாளர் ஒருவர்.

மருந்து பதுக்கல் ஆரம்பம்
இதில் மத்திய அரசின் மற்றோர் அறிவிப்பும் மாற்றுத் திறனாளிகளை மட்டுமின்றி குறிப்பிட்ட சில வகை நோய்களால் பாதிக்கப் பட்டவர்களையும் கடுமையாக இம்சிக்கத் தொடங்கியிருக்கிறது. "நான் மூட்டு வலியால் கடுமையாக அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு மாற்றுத் திறனாளி. மூட்டு வலிக்கு ஹைட்ரோசைக்ளோரோகுயின் (hydroxychloroquine) என்ற மருந்தை உட்கொண்டு வருகிறேன். இந்த மருந்தை இப்போது பதுக்கத் தொடங்கி விட்டனர். இது கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் என்று மருத்துவர்களால் கருதப்படுகிறது. இப்போது டாக்டர் சீட்டு இல்லாமல் இந்த மருந்தை கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர். இந்த மருந்து இல்லா விட்டால் நான் மாண்டு போய் விடுவேன்" என்கிறார் மும்பையில் உள்ள 37 வயது பெண்மணி மொய்னிதீபா மாதங்கினி..

பாராட்டத்தக்க முயற்சி
இதனிடையே மார்ச் 28 ம் தேதி மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் மத்திய உள்துறை செயலாளருக்கு எழுதியிருக்கும் ஒரு கடிதத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை காப்பாற்ற எல்லா தேவையான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்கள் தடையின்றி தங்கள் பணியை மேற்கொள்ள அவர்களுக்கு சிறப்பு அனுமதி அட்டைகளை ஒவ்வோர் மாநில அரசும் உடனடியாக வழங்க எல்லா மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் உத்திரவிடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இது ஓர் நல்ல முயற்சிதான். பாராட்டத் தக்க முயற்சிதான். ஆனால் நடைமுறையில் எந்தளவுக்கு செயற்பாட்டுக்கு வரப்போகிறது என்றுதான் தெரியவில்லை.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications