’கஞ்சாமேல்’ பாய்ஸ்..கொடைக்கானலை கதறவிட்ட கேரளன்ஸ்.. மூக்கு முட்ட போதையில் கையை வைத்து செய்த காரியம்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனை முன்பு நேற்று போதையில் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர் தன்னுடைய கழுத்தை தானே அறுத்துக் கொண்ட பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. கழுத்தை கண்ணாடி துண்டால் அறுத்த போதாது என்று, கை விரல்களால் கழுத்தை கிழித்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில் போதைக்கு விருப்பப்பட்டு வரும் பயணிகளை குறி வைக்கும் கும்பலின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது.

பல பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் போதை காளான், கஞ்சா ஆகியவை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து கொடைக்கானலின் மலைப் பகுதிகளில் அடிக்கடி வனத்துறையினரும் காவல்துறையினரும் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சில தங்கும் விடுதி நிர்வாகங்களே நேரடியாக சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் போதை காளான் விற்பனையும் நடைபெற்று வருவதாகவும், மேலும் மெத்தப்பட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து நண்பர்களுடன் கொடைக்கானல் வந்த இளைஞர் தன்னுடைய கழுத்தை தானே அறுத்துக் கொண்ட பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. கழுத்தை கண்ணாடி துண்டால் அறுத்த போதாது என்று, கை விரல்களால் கழுத்தை கிழித்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.
கொடைக்கானல் மேல் மலை கூக்கால் மலை கிராமத்திற்கு கேரளாவை சேர்ந்த நஜி 23, கிறிஸ்டி 23, மஜின் 17 ஆகிய மூன்று இளைஞர்கள் நேற்று சுற்றுலா வந்துள்ளனர். இதில் நஜி என்ற இளைஞர் கஞ்சா அதிகமாக உட்கொண்டதாகவும் அதனால் போதை அதிகமாகி ஓடும் வாகனத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனால் நஜிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதால், அருகில் இருந்த அரசு மருத்துவமனைககு காயத்திற்கு மருந்து வாங்க வாகனத்தில் அந்த மூன்று பேரும் வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நஜி என்ற இளைஞருக்கு போதை தலைக்கேறி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தாய் சேய் நல பிரிவு கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடியை தனது கையால் குத்தி உடைத்து அதில் இருந்த கண்ணாடி துண்டை எடுத்து தனது கழுத்தில் குத்தி கிழித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர் பார்க்காத உடன் வந்திருந்த நண்பர்கள் அவரது கையை பிடிக்க முயற்சி செய்துள்ளார்கள். இதில் நஜி , கிறிஸ்டி என்பவரது கையை பிடித்து கடித்துள்ளார். இதனால் அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் அவர்களை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கழுத்தில் குத்திய கண்ணாடியை விட்டு விட்டு தனது கை விரல்களை கொண்டு ஆக்ரோசமாக தனது கழுத்தை கிழிக்க நஜி முயற்சி செய்துள்ளார்.
இதனால் அங்கிருந்தவர்கள் பதறிபோய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பிறகு ஒரு வழியாக இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த நஜியை மீட்டு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர். இந்த சம்பத்தால் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கஞ்சா சாப்பிட்டுள்ளனரா, அல்லது வேறு ஏதும் போதை வஸ்துக்கள் பயன்படுத்தி உள்ளனரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கொடைக்கானல் மலை பகுதிகளில் போதை வஸ்துக்கள் அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது.
காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா, போதை காளான்களை பறிமுதல் செய்து வந்தாலும் மறுபுறம் போதை வஸ்துக்கள் தற்போது மேலும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனால் வருங்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறி வருகிறது. எனவே இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தலையிட்டு கஞ்சா, போதை காளான் போன்ற போதை வஸ்துக்கள் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications