காமராஜர் யார் மோடி யார்னு மக்களுக்கு நல்லாவே தெரியும்.. அண்ணாமலைக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி!
திண்டுக்கல்: காமராஜருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், அதுகுறித்து அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குட்டியபட்டியில் ரூபாய் 38 லட்சம் செலவில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அண்ணாமலையின் விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடக்கிறது. அப்போது வருபவர்கள் தங்கி சாப்பிட்டு விட்டு செல்வார்கள். இதில், வீடு என்பது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்த வீடு பிடித்தவர்கள் வருவார்கள். வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு சாப்பாடு சரியில்லை எனக் கூறுவது போல், தேசிய ஜனநாயக கூட்டணியில் 9 வருடங்கள் இருந்து விட்டு சாப்பாடு சரி இல்லை என்று அதிமுக கூறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், "அண்ணாமலை அவரது கட்சியின் கருத்தை தெரிவித்திருக்கிறார். நாங்கள் ஏன் வெளியே வந்தோம் என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்துள்ளார். திருப்பி திருப்பி கூற வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் வெளியே வந்தோம் என தமிழக மக்களுக்கும் அதிமுகவினருக்கும் நன்றாக தெரியும்" என்றார்.
கூட்டணிக் கதவு திறந்து தான் உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், "அவர் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது தெரியாது. நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், "காமராஜர் யார் மற்றவர்கள் யார் காமராஜர் எப்படிப்பட்டவர், மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். இது குறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை." எனத் தெரிவித்தார்.
கர்மவீரர் காமராஜர் அவர்களைப் போலவே, நமது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் 80% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். மோடி வந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும் என்று பேசியிருந்தார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications