கெஜ்ரிவால் நிலைமைதான் ஸ்டாலினுக்கும்.. திமுகவை வீட்டுக்கு அனுப்புவாங்க! நத்தம் விஸ்வநாதன் கணிப்பு
திண்டுக்கல்: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் ஆட்சி புரிந்தார், ஊழல் ஆட்சி செய்ததே அவரது வீழ்ச்சிக்கு காரணம், அதே போல் தான் தமிழகத்திலும் ஊழல் ஆட்சி புரிந்து வரும் திமுக தலைவர் ஸ்டாலினை விரைவில் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யூசுப் அன்சாரி முன்னிலையில் அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழகத்தில் கட்டுக்கோப்பான கட்சி ஒன்று இருக்கிறது என்றால் அது அதிமுக ஒன்று மட்டும் தான். இன்று நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஊழல் மிகுந்த ஆட்சி கெஜ்ரிவால் ஆட்சி தோல்வியை சந்தித்துள்ளது. எவ்வளவு நல்ல பணிகளை செய்திருந்தோம் என்று கூறினாலும் ஊழல் மிகுந்த ஆட்சி, அராஜகம் மிகுந்த ஆட்சியை கொடுத்ததால் டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து உள்ளனர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் ஆட்சி புரிந்தார், ஊழல் ஆட்சி செய்ததே அவரது வீழ்ச்சிக்கு காரணம், அதே போல் தான் தமிழகத்திலும் ஊழல் ஆட்சி புரிந்து வரும் திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இதே நிலைதான் தமிழகத்திலும் ஊழல் நிறைந்த ஆட்சி, திமுகவினரின் அராஜகம் மிகுந்த ஆட்சி, மது கலாச்சாரம் என மக்களை பல்வேறு இன்னல்களுக்கு திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று தேர்தல் வந்தாலும் திமுகவிற்கு தக்க பாடம் தமிழக மக்கள் புகட்டுவார்கள். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. விரைவில் திமுக அரசை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக அனைவரும் நடத்திட வேண்டும்" என்றார்.
டெல்லி தேர்தல்: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவும், 8ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலையில் பாஜக 45க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். இதன் மூலம் முதன் முதலாக அவர் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளதோடு, எம்எல்ஏ கூட ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல அவரது கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசேடியா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். ஆறுதல் அளிக்கும் விதமாக டெல்லியின் தற்போதைய முதல்வரான அதிஷி மட்டும் தான் போட்டியிட்ட தொகுதியில் ஆறுதல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications