குஜராத் முதல்வர்களுக்கு எமன்! மேத்தா டூ விஜய் ரூபானி வரை.. விமான விபத்தில் இதுவரை இறந்தவர்கள் யார்?
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியாகி உள்ளார். இதற்கு முன்பும் குஜராத் முன்னாள் முதல்வர் விமானத்தில் இறந்ததால் குஜராத்தில் முதல்வராக இருந்தவர்களுக்கும், விமானங்கள் எமனாக மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர்.
இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியாகி உள்ளார். இவர் 2016 ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் 2017 ம் ஆண்டு டிசம்பர் 26 வரை முதல் முறையாக முதல்வராக இருந்தார். அதன்பிறகு 2017 டிசம்பர் 26ம் தேதி முதல் 2021 செப்டம்பர் 13ம் தேதி வரை 2வது முறையாக முதல்வராக இருந்தார். இவர் லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க விமானத்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்த ஒருவர் விமான விபத்தில் இறப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு குஜராத் முதல்வராக இருந்த பல்வந்தராய் மேத்தா இறந்தார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கடந்த 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இறக்கும் வரை முதல்வராக இருந்தார்.
கடந்த 1965ம் ஆண்டு செப்டம்பர் 19 ம் தேதி விமானத்தில் பயணித்தார். அப்போது இந்தோ - பாகிஸ்தான் போர் நடந்த சமயம். பல்வந்தராய் மேத்தா பீச்கிராப்ஃட் எனும் விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து மிதாபூர் நோக்கி சென்றார். ரான் ஆஃப் கட்ச் அருகே விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தான் விமானப்படை அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதில் பல்வந்தராய் மேத்தா இறந்தார். அவருடன் சென்ற மனைவி, பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களும் இறந்தனர்.
பல்வந்தராய் மேத்தா முதல்வராக இருந்தபோது அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால் இன்றைய விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வராக விஜய் ரூபானி பலியாகி உள்ளார்.
மேலும் குஜராத் தவிர மேலும் சில மாநிலங்களின் முன்னாள் முதல்வர்களும் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகி உள்ளனர். கடந்த 2009 ம் ஆண்டில் ஆந்திராவின் நல்லம்மளா வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி இறந்தார். மோசமான வானிலை, தொழில்நுட்ப பிரச்சனை உள்ளிட்டவற்றால் அவரது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதன்பிறகு கடந்த 2011ம் ஆண்டில் அருணாச்சல பிரதேச மாநில முதல்வராக இருந்த டொர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது. இதில் டொர்ஜி காண்டு இறந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications