நல்ல செய்தி வரும்.. அங்கன்வாடி பணியாளர்களுக்கு கனியும் காலம்! அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!
திண்டுக்கல்: அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறவில்லை. அரசு பரிசீலனை செய்து வருகிறது. எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நான் மட்டும் செல்ல முடியாது எனவும், விரைவில் நல்ல செய்தி வரும் என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு பயனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்," பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் 6 மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

பெண்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மூலம் நடத்தப்படுகிறது. இதன்படி கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
பெற்றோர் இல்லாத குழந்தைகள் கல்வி செலவிற்காக மாதம் நிதி உதவி வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் முதலமைச்சர் செயல்படுத்த உள்ளார். 2,82,000 குழந்தைகளுக்கு தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இன்று புதிய செயலி அறிமுகப்படுத்த உள்ளோம் அதன் மூலம் அனைத்து குழந்தைகள் எடை, உயரம் மற்றும் தரவுகள் பதிவு செய்யப்படும்.
கொத்தடிமைகள் என்பது தொழிலாளர் நலத்துறை பார்த்து வருகின்றனர். எங்களது துறை மீட்டெடுத்து வரும் குழந்தைகளை பாதுகாப்பது படிக்க வைப்பது பெற்றோருடன் சேர்ப்பது என்பதாகும். குழந்தை தொழிலாளர்களாக இருக்கட்டும், குழந்தை உரிமை குழந்தை கல்வி ஆகியவற்றில் முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார்.
அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறவில்லை. அரசு பரிசீலனை செய்து வருகிறது. எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நான் மட்டும் எப்படி சொல்ல முடியும். காலம் வரும்போது கனியும். நல்ல செய்தி வரும்.
பிரச்சனை என்றால் முருகனிடம் செல்ல வேண்டும். அவர்கள் முருகனைக் காப்பாற்ற போகிறோம் எனக் கூறுகின்றனர் இதைவிட சிரிப்பு என்ன இருக்கும். பிரச்சனை என்றால் கோயிலுக்கு சென்று முருகனை கும்பிட வேண்டும். முருகனைக் காப்பாத்துவதற்கு நாம் யார்?" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி," முருக பக்தர் மாநாட்டில் பெரியார் குறித்த வீடியோ வெளியிட்டது தவறு. அதிமுக அமைச்சர்களே இந்தக் கூட்டத்தில் இடம் பெற்றிருக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். திராவிடம் ஆளக்கூடிய மாநிலம் தமிழகம். திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் ஸ்டாலின். பெரியார் குறித்து விமர்சனம் செய்து கொண்டதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முற்றிலும் தவறானது அவர்களுக்கு சரியான பாடம் வருகிற காலத்தில் மக்கள் கற்பிப்பார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications