பழனியை பாஜகவுக்கு கொடுங்க.. எல்.முருகன் காரை முற்றுகையிட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள்.. ஆடிப்போன டெல்லி
திண்டுக்கல்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டனர். பாஜக சார்பில் தற்போதுவரை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பழனி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று எல். முருகன் காரை அண்ணாமலை ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் ரவி மனோகரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜக சார்பில் கடந்தமுறையில் பழனி தொகுதி வேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் வழங்கப்படவில்லை.

பழனியை பாஜகவுக்கு கொடுங்கள்
2026 தேர்தலில் எப்படியாவது பழனி தொகுதியை அதிமுகவிடம் வாங்கிவிடும் முடிவில் இருந்தனர். உள்ளூர் பாஜகவினர் பழனியில் தீவிரமாக களப்பாணிற்றி வந்தனர். பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பழனியில் அண்ணாமலை பழனியில் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியானது.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்ற யாகத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை பழனி வருகை புரிந்திருந்தார். அவரின் காரை முற்றுகையிட்டு பாஜகவின் அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். "பழனியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும், இங்கு அண்ணாமலையை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்" என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
மேலும், "கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தவர்களை ஏமாற்ற கூடாது" என்றும் பாஜக அண்ணாமலை ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினார்கள். அவர்களிடம் எல். முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பழனி பாஜகவினர் தங்களது முழக்கங்களை அழுத்தமாக பதிவு செய்ததால் முருகன் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தார். உள்ளூர் நிர்வாகிகள், காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி முருகனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications