திண்டுக்கல் நகரில் பயங்கரம்.. இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை துரத்திச் சென்ற மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் கிருஷ்ணாராவ் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள முருகபவனம் அருகே லாரி வாடகை நிறுத்தும் இடம் நடத்தி வருகிறார்

இவருக்கு 2016ம் ஆண்டு திருமணமாகி 2017ம் ஆண்டு விவாகரத்து ஆகி உள்ளது. தற்போது ராம்குமார் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். தினமும் இரவு கடையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று (08.05.21) இரவு கடை முடிந்து வீட்டிற்கு ராம்குமார் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
கோவிந்தாபுரம் மின்மயான சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த மர்ம நபர்கள் ராம்குமாரை தாக்கினர். இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைகுலைந்து கீழே விழுந்து தப்பி ஓட முயன்றார் .ஓட முயன்றவரை துரத்திய மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஒடி விட்டனர்.

இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர மேற்கு காவல் நிலைய போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன் பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி காரணமா என பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications