அதிர்ந்த பழனி..ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிய தங்கை.. அண்ணன் செய்த சம்பவம்.. ஷாக்!
திண்டுக்கல்: ஆண் நண்பருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த தங்கையை அண்ணனே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சங்கிலியம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மனைவியும், கார்த்தி என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மகன் கார்த்தி கட்டிட வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

மருத்துவமனையில் உயிரிழப்பு
இந்நிலையில் நேற்று இரவு முருகேசனின் இளைய மகள் காயத்ரி (16) படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனையில் காயத்ரியின் குரல்வளை நெறிக்கப்பட்டு உடைந்திருப்பது தெரியவந்தது. மேலும் சிகிச்சை பலனின்றி சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை
இது குறித்துத் தகவலறிந்து வந்த பழனி நகரக் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி காயத்ரி கடந்த சில நாட்களாக ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காயத்ரியின் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவர் காயத்ரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த காயத்ரி செல்போனில் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாலமுருகன் காயத்ரியை கண்டித்துள்ளார்.

அண்ணன் கொலை
இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாலமுருகன் காயத்ரியை கடுமையாகத் தாக்கி அவரது குரல்வளையை நெறித்துள்ளார். இதில் மயக்கமடைந்த காயத்ரியை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார், ஆனால் சிகிச்சை பலனின்றி காயத்ரி இறந்தது தெரியவந்தது.

விசாரணை தீவிரம்
தற்போது பழனி நகர போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயத்ரியை தாக்கும் பொழுது பாலமுருகன் மட்டும் தான் இருந்தாரா அல்லது அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனரா, சம்பவம் நடக்கும் போது காயத்ரியின் குடும்பத்தினர் எங்குச் சென்றிருந்தனர், காயத்ரியை திட்டமிட்டு ஆணவக்கொலை செய்தனரா போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயத்ரி உடன் தொலைப்பேசியில் பேசி பழகி வந்த அந்த நபர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications