"தீரன் அதிகாரம்" ஸ்டைலில் வீடுகளில் குறியீடு? கொள்ளை திட்டமா..திண்டுக்கல் புறநகர் பகுதி மக்கள் பீதி
திண்டுக்கல் புறநகர் பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் விதம் விதமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் விதம் விதமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடிக் கும் திட்டமாக இந்த குறியீடுகள் வரையப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகத்தை மக்கள் எழுப்பியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் புறநகர் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது.
இதனால் மக்கள் மத்தியில் பீதி நிலவி வரும் நிலையில், திண்டுக்கல் புறநகர் பகுதியான அறிவுத் திருக்கோவில் அருகே உள்ள வேதாந்திரி நகர், கோல்டன் நகர் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மர்ம நபர்கள் விதவிதமான குறியீடுகளை கரிக்கட்டையால் வரைந்துள்ளனர்.

திடீரென வீட்டில் குறியீடுகள்
அதாவது ஆங்கிலத்தில் எக்ஸ், ஒய் என்று எழுதப்பட்டுள்ளது. சில வீடுகளில் கேள்விக்குறி அடையாளம் உள்ளது. இந்த குறியீடுகள் திடீரென வீட்டில் எழுதப்பட்டுள்ளதை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்த தகவலும் அப்பகுதி மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது.

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம்
கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கொள்ளையடிக்கும் கும்பல் பற்றிய கதையை மையமாக கொண்டு திகிலூட்டும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். பகலில் வியாபாரிகள் போல ஒவ்வொரு தெருக்களிலும் சுற்றி கொள்ளையர்கள் வீடுகளை நோட்டமிட்டு செல்வார்கள். குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகள், வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதையெல்லாம் நோட்டமிட்டுக்கொண்டு செல்வார்கள்.

ஒவ்வொரு குறியீட்டிற்கும் ஒரு அர்த்தம்?
பிறகு கொள்ளையடித்தால் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று அடையாளம் காணப்பட்ட வீடுகளை பார்த்து மர்ம குறியீட்டை வரைந்து வைத்து செல்வார்கள். இரவில் வரும் மற்றொரு கும்பல் இந்த குறியீடு இருக்கும் வீடுகளை பார்த்து ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையடிப்பார்கள். ஒவ்வொரு குறியீட்டிற்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக அதில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

தண்ணீர் ஊற்றி அழித்தனர்
இந்த நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று சினிமா பட பாணியில் திண்டுக்கல்லில் குறியீடு வரையப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் மத்தியில் எழுந்தது. இது தொடர்பான பேச்சு அப்பகுதி மக்கள் பரபரப்பாக இருந்ததை காண முடிந்தது. குறியீடு உள்ள வீடுகளை மட்டும் நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் குறிவைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள், தங்கள் வீடுகளில் வரையப்பட்ட குறியீட்டை தண்ணீர் ஊற்றி அழித்தனர்.

சந்தேக நபர்கள் இருந்தால்
எனினும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? இந்த குறியீடுகளை வரைந்து வைத்தது யார்? என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால், காவல்துறை ரோந்து பணியை தீவிரப்படுத்தி சந்தேக நபர்கள் இருந்தால் அவர்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications