அதிமுகவில் மீண்டும் சலசலப்பு... திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு..!
திண்டுக்கல்: முதலமைச்சர் ஓ.பி.எஸ். என்றும் துணை முதலமைச்சர் இ.பி.எஸ். என்றும் திண்டுக்கல்லில் அதிமுகவினர் ஓட்டிய போஸ்டரால் அக்கட்சியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஒட்டியுள்ள இந்த போஸ்டரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் படம் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு கூட்டறிக்கை மூலம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் இந்த போஸ்டர் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சர்ச்சை
கடந்த வாரம் முழுவதும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் தான் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக இருந்தது. அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தை கூறியதால் அதிமுக தொண்டர்கள் குழப்பமும், சோர்வும் அடைந்தனர். இந்த விவகாரம் அதிமுகவின் உட்கட்சி மோதலை வெளிச்சம் போட்டுக்காட்டியது. அதுவும் குறிப்பாக சுதந்திர தினத்தன்று சென்னை பசுமை வழிச்சாலையில் நடைபெற்ற நிகழ்வுகள் 2017-ம் ஆண்டுகள் காட்சிகளை கண் முன் நிறுத்தின.

முற்றுப்புள்ளி
இதனிடையே விரிசல் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த அதிமுக சீனியர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரையும் கூட்டறிக்கை வெளியிட வைத்தனர். அதில் தலைமையின் அனுமதியின்றி யாரும் பொதுவெளியில் கருத்துக்கூறக் கூடாது என கடுமையான முறையில் அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் திண்டுக்கல்லில் அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டி அக்கட்சியில் மீண்டும் சலசலப்பை உருவாகியுள்ளது.

நன்றி தெரிவித்து
திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக ராஜசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் தீவிர ஆதரவாளர். இவருக்கு கட்சியில் பதவி கிடைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் பெயருக்கும் கீழே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அச்சகத்தில் தவறு
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக இந்த போஸ்டர் விவகாரம் தலைமை வரை சென்றுள்ளது. இதையடுத்து பதறிப்போன அந்த நிர்வாகி தாம் ஒட்டிய போஸ்டரை தாமே கிழித்துள்ளார். இது அச்சகத்தில் நடைபெற்ற தவறு என்றும் தாங்கள் இப்படி குறிப்பிட்டுக் கொடுக்கவில்லை எனவும் ராஜசேகரன் தரப்பு விளக்கம் கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications