குளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானில் குவிந்த மக்கள்.. அறைகள் கிடைக்காமல் ஏமாற்றம்
திண்டுக்கல்: வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் கத்தரி வெயில் கொளுத்தி வரும் நிலையில், கொடைக்கானலிலும், ஊட்டியிலும் குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது.
இந்த குளுமையான சீதோசனத்தை அனுபவிப்பதற்காக கொடைக்கானலை நோக்கி மக்கள் குவிந்து வருகின்றனர். கொடைக்கானலில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது.

குவிந்த மக்கள்
மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து இருப்பதால் கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது. வெயில் கொடுமையால் தவித்து வரும் மக்கள், கொடைக்கானலுக்கு சனிக்கிழமையான நேற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் குவிந்தனர்.

குளுகுளு சீசன்
கொடைக்கானலில் நேற்று காலையில் சற்று வெயில் அடித்தாலும் பிற்பகலுக்கு பிறகு மிக அற்புதமான இதமான சீதோஷண நிலை காணப்பட்டது. இன்றும் சீதோஷண நிலை சிறப்பாக இருந்தது.

மலர்களை ரசித்த மக்கள்
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரியிலும் உற்சாகத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை கண்டு ரசித்தனர்.

அறைகள் கிடைக்காமல் அவதி
சுற்றுலா பயணிகள் வருகையால் கொடைக்கானலில் அறைகள் நிரம்பி வழிந்தன. ஏராளமான தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் அறைகள் கிடைக்காமல் பல சுற்றுலாப்பயணிகள் அவதிப்பட்டனர்.











Click it and Unblock the Notifications