கறி விருந்து.. கபடி போட்டி.. மாட்டுவண்டி பந்தயம்! களைகட்டும் அமைச்சர் ஐ.பி.பிறந்தநாள் கொண்டாட்டம்!
திண்டுக்கல்: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் பிறந்தநாளை இம்மாதம் முழுவதும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்.
கறி விருந்து, கபடி போட்டி, மாட்டுவண்டி பந்தயம், என வாரத்திற்கு இரண்டு நிகழ்வுகளை நடத்தி அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான தங்களின் அன்பையும், விசுவாசத்தையும் அவரது ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 6ஆம் தேதி அவரது 70வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் வாக்குறுதி என்னாச்சு அண்ணாமலை? தமிழர்களை சாதி, மதமாக பிரிக்க முடியாது - அமைச்சர் பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக திகழும் ஐ.பெரியசாமியை பொறுத்தவரை அமைதியான சுபாவம் கொண்டவர். எதை பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அரைநூற்றாண்டு காலம் அரசியல் செய்தவர். ஆண்டுதோறும் ஜனவரி 6ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்தாண்டு தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் இம்மாதம் முழுவதும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி முழுவதும்
பொதுவாக அமைச்சர்களின் பிறந்தநாள் என்றால் அவர்களது ஆதரவாளர்கள் ஒரு நாள் கொண்டாடுவார்கள், மூன்று நாள் கொண்டாடுவார்கள் அல்லது ஒரு வாரம் கொண்டாடுவார்கள். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்களும், அபிமானிகளும் மட்டும் தான் அவரது பிறந்தநாளை ஜனவரி மாதம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்காவிட்டாலும் அவரது மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பங்கேற்று வருகிறார்.
கறி விருந்து
கறி விருந்து, கபடி போட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் என அமைச்சர் ஐ.பி. ஆதரவாளர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தளவுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமியை தாங்கள் கொண்டாட காரணம் அவரது அனுகுமுறையே தவிர வேறு அல்ல என்கிறார்கள் திண்டுக்கல் திமுகவினர். மேலும், கட்சியிலும், ஆட்சியிலும் உயர்ந்த இடத்தில் இருப்பினும் கூட சந்திக்கச் செல்கிறவர்களிடத்தில் கண்ணியமாக பேசுவார், எடுத்தெறிந்து பேசமாட்டார், என அவரது பெருமையை பட்டியலிடுகின்றனர்.
ஐ.பி.செந்தில்குமார்
தந்தைக்கும் மகனுக்கும் பிணக்கு உள்ளதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை தவிடுபிடியாக்கும் விதமாக தனது தந்தையும், அமைச்சருமான ஐ.பி. பிறந்தநாள் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று முன்னின்று நடத்தி வருகிறார் ஐ.பி.செந்தில்குமார்.