"மினிமம் பேலன்ஸ் வைக்க முடியல, உனக்கு எதுக்கு".. வங்கி மேனேஜரின் அடாவடி.. தீயாய் பரவும் வீடியோ
திண்டுக்கல்: "மினிமம் பேலன்ஸ் கூட வைக்க முடியல.. எதுக்கு உனக்கு ஏடிஎம் கார்டு" என வாடிக்கையாளர் ஒருவரை வங்கி மேனேஜர் தரக்குறைவாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏடிஎம் கார்டு தொலைந்து போனதால் புதிய கார்டுக்கு விண்ணப்பித்த வாடிக்கையாளரை இப்படி அவமானப்படுத்தும் விதமாக பேசிய அந்த மேனஜருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் பணத்தில் வங்கியை நடத்திவிட்டு, அவர்களையே மதிக்காமல் பேசும் இதுபோன்ற உயரதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இயந்திரத்தில் சிக்கிய ஏடிஎம் கார்டு.. வடஇந்திய இளைஞர் செய்த காரியம்! ஜெயிலில் கம்பி எண்ணும் பரிதாபம்
தரம் குறைந்த வாடிக்கையாளர் சேவை..
பொதுவாகவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அதேபோல, அந்த வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களிலும் பல நேரங்களில் பணம் இருப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. ஏடிஎம்-இல் பணம் வராமல் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்றால், அங்கு கூலாக உட்கார்ந்திருக்கும் அதிகாரிகள், "ஏன் சார்.. ஏடிஎம்மில் போய் எடுக்க வேண்டியதுதானே.." என எரிந்து விழுவார்கள். ஏடிஎம்-இல் பணம் வரவில்லை என்பதால்தான் இங்கு வந்தோம் எனக் கூறினால், "ஒரு ஏடிஎம்ல இல்லனா வேற ஏடிஎம்-க்கு போய் பாருங்க" எனக் கூறி வாடிக்கையாளர்களை விரட்டுவார்கள். மேலும், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தரப்படுவது கிடையாது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது திண்டுக்கல்லில் நடந்திருக்கிறது.
காணாமல் போன ஏடிஎம் கார்டு..
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேட்டுப்பட்டியை சேர்ந்த உமாபதி என்பவர் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இதனிடையே, இவரது ஏடிஎம் கார்டும், வங்கி பாஸ்புக்கும் காணாமல் போயுள்ளது. இதனால் தனக்கு புதிய ஏடிஎம் கார்டு மற்றும் பாஸ்புக் வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட வங்கியில் உமாபதி கடந்த மாதம் அதற்குரிய கட்டணத்தை கட்டி முறையாக விண்ணப்பித்துள்ளார்.
"என்னய்யா வெங்காயம்.."
புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பித்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியும், உமாபதிக்கு புதிய கார்டு கிடைக்கவில்லை. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து கேட்பதற்காக அவர் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வங்கி மேலாளர், உமாபதியை தரக்குறைவாக பேசியிருக்கிறார். அவர் உமாபதியிடம், "உங்க அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸே இல்ல.. இதுல எதுக்கு ஏடிஎம் கார்டு" எனக் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் உமாபதி, "சார்.. என் அக்கவுன்ட்டில் மாச ட்ரான்ஷாக்சன் பாருங்க." என்கிறார். அப்போது மேனேஜர்.. "என்னய்யா..வெங்காயம் ட்ரான்ஷாக்சன்.. ஒரு மினிமம் பேலன்ஸ் 500 ரூபா வைக்க முடியல.. உங்களுக்குலா எதுக்கு ஏடிஎம் கார்டு" என மோசமாக பேசுகிறார். மேனேஜரின் இந்த தரக்குறைவான பேச்சால் அவமானம் அடைந்த உமாபதி அங்கிருந்து சென்றுவிட்டார்.
கொந்தளிக்கும் மக்கள்..
இந்நிலையில், மேனேஜரின் இந்த பேச்சை வங்கியில் இருந்த மற்றொருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டார். பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்து கமெண்ட் செய்துள்ளனர். "எந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையாளர்களை மதிப்பது கிடையாது. இதுபோன்ற அகந்தை பிடித்த மேனஜர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டும்" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் பதிவிட்டுள்ள கமெண்டில், "மினிமம் பேலன்ஸ் இல்லாததால் ஏடிஎம் கார்டு எதுக்கு எனக் கேட்கிறீர்களே.. எந்த வேலையும் செய்யாத உங்களுக்கு எதுக்கு வங்கிப் பணி என நாங்கள் கேட்கலாமா.." எனக் கூறியுள்ளார். இவ்வாறு பலரும் அந்த மேனேஜரை திட்டி பதிவிட்டு வருகின்றனர். மேலும், வாடிக்கையாளரை மதிக்காத அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.