ஜல்லிக்கட்டு 2025: மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஆன்லைன் பதிவு அவசியம்! ஆட்சியர் அறிவிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி கூறியுள்ளார்.
தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் நடத்தப்படுகிறது.

அவனியாபுரம் பகுதியில் ஜனவரி 14-ஆம் தேதியும்,15ஆம் தேதி பாலமேடு பகுதியிலும்,பதினாறாம் தேதி அலங்காநல்லூர் பகுதியில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிகள்:
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் பதிவு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மதுரையில் நடைபெறக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆன்லைன் பதிவு நிறைவு பெற்றது.
ஆன்லைன் பதிவு:
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு அறிவிக்கையின்படி, ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும்.
இணைய முகவரி:
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரிய கலையம்புத்தூர் கிராமத்தில் 16.01.2025 அன்று வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் 11.01.2025-ம் தேதி காலை 08.00 மணி முதல் 13.01.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், முதலானவற்றை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
பதிவு அவசியம்:
அதேபோல், மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான பதிவுகளையும் மேற்சொன்ன https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள காளையின் உரிமையாளர்கள் https://dindigul.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும்
ஜல்லிக்கட்டு டோக்கன்:
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் விதிகளின்படி டோக்கன் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு, டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேற்கண்ட விபரங்கள் இடம் பெறாத ஆன்லைன் பதிவுகள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டு ஆன்லைன் மூலமாகவே அவர்களுக்கு வழங்கப்படும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications