கணவன் கண்முன் பெண்ணின் ஆடையை கழற்றி.. போலீஸ் ஸ்டேஷனில் ’விடுதலை’ சம்பவம்! போலீசாருக்கு சிறை தண்டனை!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்த பெண்ணின் உடைகளை கணவன் கண்முன் அவிழ்த்து மானபங்கம் செய்த புகாரில் 24 ஆண்டுகளுக்கு பிறகு காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி வேலை செய்து வந்த அவருக்கு மாரியம்மாள் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்பகுதியில் திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அவர்களை அந்த திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் செம்பட்டி காவல் நிலைய போலீசார்.
மேலும் திருட்டு வழக்கு தொடர்பாக அவர்களிடம் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சண்முகத்தை போலீசார் கடுமையாக தாக்கியதோடு காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி, காவலர்கள் வீராணத்தேவர், சின்ன தேவர் ஆகியோர் கணவன் கண் முன்னே மாரியம்மாளின் உடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர். மேலும் விடிய விடிய அவர்களை லத்தியால் கொடூரமாக தாக்கி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

காலையில் காயமடைந்த அவர்களை தாங்கள் அழைக்கும் போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டுமென மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற மாரியம்மாள் காவல் நிலையத்தில் தன்னை போலீசார் தாக்கியதால் மனமுடைந்து வீட்டின் அருகே இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிய அவரை ஊர் மக்கள் மீட்டு பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தனது மனைவிக்கும் தனக்கும் நேர்ந்த கொடூரம் குறித்து சக்திவேல் திண்டுக்கல் கோட்டாட்சியராக இருந்த ஜெகநாதனிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தன்னையும் தனது மனைவியையும் கொடூரமாக போலீசார் தாக்கி, மனைவியை மானபங்கம் செய்ததால் மனம் உடைந்த சக்திவேல் 25ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2001ல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதற்கிடையே சக்திவேல் அளித்த புகார் தொடர்பாக கோட்டாட்சியர் ஜெகநாதன் ஊர் மக்களிடமும் காவல் நிலையத்திலும் விசாரணை நடத்தினார். வழக்கு தொடர்பாக திரட்டப்பட்ட ஆவணங்கள், 40 சாட்சிகள் உள்ளிட்டவை திண்டுக்கல் கோட்டாட்சியர் சார்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ரங்கசாமி, காவலர்கள் வீராண தேவர், சின்னத் தேவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
24 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்ததும் காவல் ஆய்வாளர் ரங்கசாமி, காவலர்கள் வீரனத்தேவர், சின்ன தேவர் ஆகியோருக்கு குற்றவாளிகள் என நீதிபதி பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். சம்பவம் நடந்தபோது செம்பட்டி காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமிக்கு தற்போது 77 வயதாகிறது. காவலர்கள் வீரத்தேவருக்கு 68 வயதும், சின்னத் தேவருக்கு 69 வயதும் ஆகிறது.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தலா 9 வருடம் சிறை தண்டனையும், 36,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தற்போது அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திண்டுக்கல் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து தீர்ப்பு வந்ததும் அதனை கேட்டு கதறி அழுதபடி முகத்தை மூடிக்கொண்டு அவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications