நீர்நிலைகளில் செல்பி எடுக்காதீங்க.. திண்டுக்கல் காவல்துறை வேண்டுகோள்!
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் நீர் நிலைகளில் செல்பி எடுக்க வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மதுரை தேனி தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. குடியிருப்புப் பகுதிகள் விவசாய நிலங்கள் கனமழையின் தாக்கத்திற்கு இலக்காகி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை ஆறு, குடகனாறு, சந்தானவர்த்தினி ஆகிய ஆற்றுப்படுகைகளில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று மட்டும் சுமார் பத்து சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள் ஓடைகள் குளங்கள் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மணல் கொள்ளை காரணமாக குளங்கள் ஏரிகள் ஆறுகள் பிரம்மாண்ட பள்ளங்கள் ஏற்பட்டு அதில் தற்போது நீர் நிறைந்துள்ளது. குளங்களில் பொதுமக்கள் குழந்தைகள் கால்நடைகள் விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வெள்ளப்பெருக்கை காணவோ அல்லது நீர்நிலைகள் அருகே நின்று செல்பி எடுக்க பொதுமக்கள் முயற்சி எடுக்க வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது..
இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் ஏரிகள் குளங்கள் நிரம்பி உள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நீர் நிலைகளில் குளிக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது